உத்தராகண்டின் இமயமலைச் சரிவில் ஒரு வசந்தகாலத்தின் துவக்கத்தில் நிகழும் ஒரு காதல் கதை இது. மூன்று நாட்களே நீடிக்கும் அந்த சிறிய உறவில் காதலும் இயற்கையும் எப்படி ஒன்றை ஒன்று தழுவி நிரப்பிக்கொள்கின்றன என்னும் சித்திரத்தை தேர்ந்த நடையில் ஆசிரியர் இதில் அளிக்கிறார். புலன் வழி அனுபவங்களால் மட்டுமே சென்றடையும் ஒரு அகவிடுதலையை இந்நாவல் மேலதிகமாக தொட்டுக்காட்டுகிறது. தமிழில் கதைக்களம் மற்றும் பேசுபொருள் சார்ந்து இந்நாவல் ஒரு முக்கியமான புதிய முயற்சி.
மைத்ரி வாசகர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்வு
எழுத்தாளர் சுசித்ராவின் முன்னுரை
இயற்கையின் தெய்வீகம்
நித்யசைதன்ய யதி தன் இளம்வயதில் ஆசிரியர் நடராஜ குருவுடன் இமையமலையை காணச்சென்ற நிகழ்வை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் இமயமலையைக் காண்பது அதுவே முதல் முறை. அவர்கள் முன் கம்பீரமாக எழுந்து நின்றது பனிமலை, வெண்முகில்கள் சூழ்ந்து நின்றன அதன் சிகரங்கள். நித்யாவின் பரவசத்தை கண்ட நடராஜ குரு, “இதோ இந்தப் பேரழகின் தரிசனமே காளிதாசனை கவிஞனாக்கியது” என்றார். “ஒருவன் இந்தக் காட்சியை கண்டபிறகும் அவனுக்குள் தெய்வீகத்தை பற்றிய ஞானம் உருவாகவில்லையென்றால் அவன் மீட்கப்படமுடியாத குருடன். நம் உள்ளங்களில் இந்தக்கணம் பொங்கும் பரவசமே கடவுள்.”
நித்யசைதன்ய யதியின் மாணவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் ஜெயமோகன். அதேபோல அஜிதன் தன் மகன் மட்டும் அல்ல மாணவரும் கூட என்று ஜெயமோகன் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். ஆக குருதி உறவுக்கு அப்பால் குருவழி தொடர்ச்சி ஒன்றும் இருக்கிறது, நடராஜ குருவில் தொடங்கி அஜிதன் வரை. அதன் செல்வாக்கு அஜிதனின் முதல் நாவலான ‘மைத்ரி’யில் தெரிகிறது. இது முழுக்க முழுக்க இயற்கையின் பேரழகை ஒரு மனித உள்ளம் சந்திக்கையில் உருவாகும் பரவசத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். இயற்கையின் தெய்வீகம் என்று நடராஜ குரு சுட்டிக்காட்டும் பண்பால் நிறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் இலக்கியத்தில் ‘மைத்ரி’ மிகப்புதுமையான முயற்சி.
அஜிதனை அறிந்த வகையில், அவருடைய நாட்டங்கள் ஒரு புறம் உயர் கலை சார்ந்தவை. குறிப்பாக இசை. அவர் இசைமேதை வாக்னர் மேல் கொண்டுள்ள மாபெரும் ஆராதனையை அவருடன் சற்றேனும் பழகிய அனைவரும் அறிவர். மறுபுறம் கீழை, மேலை தத்துவங்களில் ஆழமான படிப்பு உடையவர். குறிப்பாக ஷோப்பனவரில். அவருடைய விரிந்த கலை-தத்துவார்த்த படிப்புகளின் தாக்கம் இந்த நாவலில் காணக்கிடைக்கிறது.
பொதுவாக தத்துவார்த்தமான தளங்களை ஒரு நாவல் தொட்டுச்செல்லும் போது பல சமயங்களில் அடிவயிற்றில் கல்லை கட்டினாற்போல் தத்துவ மொழியின் கனம் அதில் விழுந்துவிடுகிறது. அப்போது அது அடிப்படையான அனுபவ உணர்ச்சியை சற்று குறைக்கிறது. இந்த நாவலில் அது நிகழவில்லை. ‘மைத்ரி’யின் மிகப்பெரிய பலம் முழுக்கவே புலன்விழிப்பினால், துளித்துளியான அனுபவ சேர்க்கையினால் ஆசிரியர் நமக்கு கதை சொல்வதுதான். ஓங்கும் இமயமலையைக்காணும் பரவசத்தின் வழியே நடராஜகுரு கடவுளை கண்டதுபோல் இந்த நாவல் அளிக்கும் உணர் அனுபவங்களே இதன் ஆழங்களை கடத்துகின்றன.
அதற்கு பெரிய உறுதுணையாக இருப்பது இந்த நாவலில் துடியுடன் வெளிப்படும் ‘இளமை’ என்ற அம்சம். நாவலின் கதைசொல்லி ஹரன் சற்று அறிவுஜீவியான சமகால இளைஞன் ஒருவனின் அமையமுடியாமை, தேடல், கசப்பு, நையாண்டி எல்லாம் வெளிப்படும் கதாபாத்திரம். ஒவ்வொரு கணமும் புலன்களை அகலத் திறந்து சுற்றத்தை துழாவிக்கொண்டே இருப்பவன். அழகுணர்ச்சி, காமம், கற்பனாவாத எழுச்சிகள் கொண்டவன். அதே சமயம் குழந்தைக்கால களங்கமின்மை முற்றாக அழியாத ஒருவன். இவை எல்லாம் அவனில் அலைமோதுகின்றன. இப்படிச்சொல்லலாம், எந்த ஆர்வமும் புலன் கூர்மையும் அழகுணர்ச்சியும் நடராஜ குரு போன்றவரில் கனிந்து ஞானமாகிறதோ, அதே விஷயங்கள் ஹரனில் இளம் ரத்தத்தின் உணர்ச்சிகளோடு கொப்பளிக்கின்றன. இப்படி அலைமோதி நுரைக்கும் இளமையே இந்த நாவலின் துடிப்பான தாளத்தை கட்டமைக்கிறது.
ஹரனில் இந்த வண்ணங்கள் மாறி மாறி வருவது நாவலின் மிக வசீகரமான அம்சங்களில் ஒன்று. உதாரணமாக நாவலில் ஹரன் சௌந்தரியலஹரியை பரவசத்துடன் நினைவுகூரும் ஒரு இடம் வருகிறது. அதற்கு அடுத்த வரியிலேயே ஆதிசங்கரர் மீதான அவனது சிறிய சீண்டல் வெளிப்படுகிறது. சௌந்தரியலஹரிக்கு உரை எழுதிய நடராஜ குருவும் அந்த இடத்தில் சிரித்திருப்பார்.
இறப்பும் பிரிவும் என அகச்சிக்கல்களால் அலைக்கழிக்கப்படும் ஹரன் ஏதோ உள்ளுணர்வால் கங்கையின் ஊற்றுநதிகளில் ஒன்றான மந்தாகினியின் பாதை வழியாக இமயமலை அடுக்குகளுக்குள் ஏறி கேதார்நாத் வரை போக முடிவெடுக்கிறான். வழியில் மைத்ரி பன்வார் என்ற இளம் கட்வாலி பெண்ணை சந்திக்கிறான். அவர்களுக்குள் ஒரு பந்தம் உருவாக, அவள் அவனை மலைகளுக்குள் இருக்கும் தன் மூதாதையர்களின் ஊருக்குக் கூட்டிச்செல்கிறாள்.
மலைகள், வானம், பருவம், பூக்கள் மட்டுமல்லாது, அந்த நிலத்தின் மக்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை என்று அனைத்தையும் ஆசிரியர் துளித்துளியாக இந்த பயணத்திற்குள் கட்டி வைத்திருக்கிறார். விலங்குகளின் பராமரிப்பு, இசை, மேய்ச்சல் நிலமக்களின் வாழ்வியல், உணவு பண்பாடு, பண்டிகைகள், கொண்டாட்டங்கள், குலதேவதா சடங்குகள் என்று ஒரு முழு பண்பாட்டையே படைக்கிறார்.
இந்தக்கதையை ஆழமாக்குவது மூன்று விஷயங்கள். ஒன்று, ஹரனின் இளமை, தீவிரம். இரண்டு, மைத்ரி, அவளுடனான பயணம் வழியே ஹரன் எதிர்கொள்ளும் இயற்கை. மூன்று, இந்தப் பயணத்திற்கு பின்னால் நிகழும் ஆழமான சுயவிசாரணை சார்ந்த பகுதிகள்.
மேலோட்டமாக இந்த நாவலுக்கு முன்னோடி வடிவங்கள் என தோன்றுவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் கற்பனாவாத நாவல்கள்தான். கண்டிப்பாக அவற்றின் சாயல் இதில் உள்ளது. கதேயின் ‘காதலின் துயரம்’ (The Sorrows of Young Werther), அலெக்சாண்டர் குப்ரினின் ‘ஒலெஸ்யா’ (Olesya) போன்ற நாவல்களைச் உதாரணமாக சொல்லலாம். அவையும் வயதடைதலை (bildungsroman) சொல்லும் நாவல்களே. ஆகவே அவற்றுடனான ஒப்பீடுகளும் இயல்பானவை தான்.
0 Comments