கடிதங்கள்

 



வாசகர்கள் தங்கள் வாசிப்பனுபவங்களை கடிதங்களாக ajithan.writer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

மைத்ரி நாவலுக்கு சமீபத்தில் நடந்த விமர்சன அரங்கும் அதை தொடர்ந்த புத்தக கண்காட்சிக்கும் பின் ஒரு இரண்டாவது வாசிப்பு அலை துவங்கியிருப்பதை காணமுடிகிறது. கடந்த ஒரு வாரமாக சில தொலைபேசி அழைப்புகளும் ஐந்தாறு கடிதங்களும் வந்துள்ளன. அதில் என் சமகால எழுத்தாளர்களான வாசு முருகவேல் மற்றும் வைரவன் லெ. ரா ஆகியோரின் பாராட்டை மிக முக்கியமானதாக கருதுகிறேன். அன்பிற்குரிய குருஜி சௌந்தர் எழுதிய மதிப்புரையும் அப்படியே. வாசிப்புகள் பல தளத்தில் நிகழ்வது சில புத்தகங்களுக்கே அமையும். மைத்ரியை மிக எளிமையான ஆரம்பகட்ட வாசிப்பிலும் அதன் முழு உணர்வுநிலையையும் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரம் நுண்மையான கவி உள்ளத்திற்கும் அதன் உள் கண்டுகொள்ள இடங்கள் பல உண்டு. அதற்கு என் கடந்த ஐந்து வருட கால தனித்த பயணங்கள் மிக முக்கிய காரணமாக இப்போது உணர்கிறேன். கலை ஈடுபாடுகள் கூட அதன் மீதே வந்து சேர்கின்றன. அடுத்த பதிப்பு அச்சில் இருக்கும் நிலையில் இதுவரை வாசித்த வாசிக்க போகும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

 - அஜிதன்

வாசிப்பனுபவம்- சியாம்


அன்புள்ள அஜிதனுக்கு,

மைத்ரியின் இரண்டாம் வாசிப்பு. ஒரு எழுத்தாளரின் படைப்புகளிலிருந்து வேறொரு எழுத்தாளருக்கு வரும்போது, என் வாசிப்பில் சிறு தயக்கம் ஏற்படும். ஆனால் மைத்ரி அப்படி அல்ல. முதல் இரண்டு பக்கங்களுக்குள்ளாகவே மைத்ரி ஈர்த்துக்கொண்டது. நான் எழுதியதை மீண்டும் வாசிப்பது போல் ஓர் அணுக்கம். 

காடு நாவலைப் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். காடு போன்ற ஒரு நாவலை எழுதுவதில் ஒரு சிக்கல் அதன் சூழல் சித்தரிப்பு என்று நினைக்கிறேன். சூழலைப் பற்றி ஏதும் விவரிக்காமல் ஒரு கதை சொல்லப்படும்போது நம் மனது தானாகவே அதற்கு ஒரு அன்றாட சூழலை பொறுத்திக்கொள்கிறது. காடு என்றவுடன் நம் மனதில் தானாகவே ஒரு காடு வந்துவிடுகிறது. அது ஒரு template போல. நாம் காடு என்று நம்பிக்கொண்டிருக்கும் காடு போன்ற ஒன்று. அந்த template-ஐ மீறி எழுத்தாளர் அந்த காட்டை நிகழ்த்திக்காட்டுவதே ஒரு பெறும்பணி. ஜெயமோகன் காடு நாவலில் அதை நிகழ்த்திக்காட்டுவார், குட்டனின் வழியே, ரெசாலத்தின் வழியே கபிலரின் வழியே. 

ஜெயமோகன் எழுதிய 'ஞானி' நூலில் ஞானியின் ஒரு கருத்து இருக்கும். நான் அதை எனக்குள் தொகுத்தக்கொண்டவாறு சொல்கிறேன். நாம் புழங்கிக்கொண்டிருக்கும் அன்றாடம் என்பது நம் conscious உடன் தொடர்பு கொண்டது. அதற்கு கீழ் unconscious உடன் தொடர்பு கொண்டவை படிமங்கள். பல்லாண்டுகளாக உயிர்ப்புடன் இருக்கும் நாகரீகம் ஒரு மனிதனுக்குள் விட்டுச் செல்பவை அவை. அதை நோக்கி திரும்புவதே தியானம் என்பது. 

ஒரு வகையில் காடு என்பதே நாம் அந்த ஆதியை நோக்கி திரும்புவது தான் என்று நினைக்கிறேன். காடு-ஆதிப் படிமங்களின் வைப்பரை. இயற்கை எப்படி மொழியாகிறது என்பதை எமர்சன் தனது இயற்கை கட்டுரைத் தொகுதியில் சொல்லி இருப்பார். முதலில் இயற்கையே மொழியாகிறது. கோவம் என்பதற்கு நேராக சிங்கத்தையும், அழகு நேராக மலரையும் சுட்டிய காலமது. Spiritual facts, natural facts-ஐ நேராகவும் நேர்மாறாகவும் பிரதிபலித்த வேளை. ஒன்றை ஒன்று பார்த்த ஆடி. அகமும் புறமும் தங்களைச் சுட்டிய மொழி. இதை வேறு வகையில் எழுத்தாளர் சுசித்ரா முன்னுரையில் கூறியிருந்ததாக தோன்றுகிறது. சங்க இலக்கியம் போல வண்ணதாசனுடைய கதைகளில் இதை அதிகம் உணர முடிகிறது. காடு நாவலில் இது மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு இளைஞனின் அகத்தில் உள்ள வேகத்தை, மீறலை, எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ளும் ஆசையை, எச்சரிக்கையை, தயக்கத்தை, தனிமையை, தன்னிரகத்தை வெளிப்படுத்தும் புறம் காட்டைத் தவிர வேறு ஒன்றாக இருக்க முடியுமா? காடு கிரிதரனின் எல்லா உணர்வுகளுக்குமான படிமங்களை தன்னளவிலேயே கொண்டிருக்கிறது. அவ்விதத்தில் மைத்ரி நாவலின் கதை சூழல் அபாரமானது.

ஹரன் எனக்கு ஒரு விதத்தில் கிரிதரன் என்றே தோன்றுகின்றான். எல்லாரும் தன்னைக் கவனித்து கொள்ளவேண்டுமென்ற மனப்பான்மை. தான் இன்றி மற்றொன்று முழுமை அடையக்கூடாது என்ற ஏக்கம். அது அப்படியல்ல என்று முன்னரே தெரிந்திருந்தும், இருப்பினும் அது நிகழ்ந்த பின் தன்னிரக்கம். மைத்ரியை முதலில் பார்த்து பேரழகி என்று உணர்ந்த கொஞ்ச நேரத்தில், தான் அவள் அருகிலிருக்க தகுதியற்றவன், அவளை இழிவு செய்கிறேன் என்ற எண்ணம். இதை நான் சில முறை உணர்ந்ததுண்டு. அதன் மூலமே நான் ஹரனுக்கு அணுக்கமானேன். நாவலின் தயக்கமற்ற வாசிப்பிற்கு முதன்மையான காரணம், ஹரனின் கண்களின் வழி அந்நிலம் திறக்கிறது என்பது. உங்களுக்கு பறவைகள் மேல் பெரும் நாட்டம் உண்டு. ஆனால் அதைப்பற்றி அறியாத ஒருவன் பார்வையிலேயே நாவல் இருக்கிறது. விடுதியில் கண்ணாடிக்கு அப்பக்கம் நிற்கும் பறவை ஹரனின் கண்களின் வழி அங்கு நிற்கிறது, அஜிதனின் கண்களின் வழி அல்ல. நாவலில் பெரும்பான்மையான சித்தரிப்பு அச்சூழலுக்குள் புதிதாக செல்பவனின் சித்தரிப்பு. அதுவே ஒரு குழந்தையின் சித்தரிப்பு. எமர்சன் மேற் சொன்ன கட்டுரையில் சொல்கிறார். " A man's power to connect his thought with its proper symbol, and so to utter it, depends on the simplicity of his character, that is, upon his love of truth, and his desire to communicate it without loss....... In due time, the fraud is manifest, and words lose all power to stimulate the understanding or the affections. Hundreds of writers may be found in every long-civilized nation, who for a short time believe, and make others believe, that they see and utter truths, who do not of themselves clothe one thought in its natural garment, but who feed unconsciously on the language created by the primary writers of the country, those, namely, who hold primarily on nature.
But wise men pierce this rotten diction and fasten words again to visible things; so that picturesque language is at once a commanding certificate that he who employs it, is a man in alliance with truth and God. "

காடு நாவலில் கிரிதரன் நகரத்திலிருந்து, கல்வெர்ட் கட்டும் இடத்திற்கு வருகிறான் அதுவும் காடு தான் ஆனால் அது காட்டின் நுழைவாயில் போல, அய்யர் இருப்பது வேறொரு காடு, நீலி இருப்பது வேறொரு காடு அல்லது காடாக நீலி இருக்கிறாள். மைத்ரி அது போல் விரிகிறது. சோன்பிரயாக், கௌரிகுந்த், திரியுக நாராயண கோவில், தேவதாரு மரங்கள், புக்யால், கங்கீ. கங்கீ எப்பொழுதும் குழந்தையாக இருக்கிறது. உலகம் குழந்தையாக இருந்த போது உதிர்ந்த ஒரு சிறு பகுதி கங்கீ. நீங்கள் முன்னுரையில் சொன்னவாறே கௌரிகுந்திலிருந்து மைத்ரியின் கிராமத்திற்கு செல்லும் கச்சர் பயணம் அபாரமானது. தேவதாரு மரங்களை பார்ப்பது நாவலின் உச்சம். ரிது பெரியம்மா நாவலில் மிக ஆழமான கதாபாத்திரம். 'குத்' என்ற காட்வாலி மொழிக்கேயான சொல்லின் வடிவம். மைத்ரியின் வடிவம். 

காதலால் நிரம்பிய மூன்று கதைகள் உள்ளன. மாத்ரி-ஜீது பகட்வால், ரிது பெரியம்மா-ஜிது பெரியப்பா. மைத்ரி-ஹரன். மூன்றுமே விலகத்தில் முடிகிறது. அதை முறிவு என்று சொல்ல முடியாது. மூன்று கதைகளிலும் அது அப்படித்தான் முடியும் என்று தெரிந்து தான் அவர்கள் தங்களை காதலால் (மாயையால்) நிறைத்துக்கொள்கிறார்கள். ஜீது அறிவான் அவள் மாத்ரி என்று, இருந்தும் காதலில் நிறைகிறான். காதலால் நிறைந்து பாதாளத்திற்கும் தேவபூமிக்கும் அல்லாடும் ஜீது-ஹரன். 

ஹரனைத் தொடரும் மந்தாகினி. அது பெண்மை என்று தோன்றுகிறது. இறுதியில் ஹரன் போய் நிற்பது ஒரு குட்டையில். அங்கு மந்தாகினி அதற்கு வழிவிட்டு வளைந்து செல்கிறது. வெதுவெதுப்பான அந்த குட்டை. ஹரன் அங்குதான் இயல்பாக உணர்கிறான். அந்த வெதுவெதுப்பே அவனை ஆற்றுப்படுத்துகிறது. அவனால் நாவலில் வரும் இரண்டு சிறுமியர் போல மந்தாகனியில் குளிக்க முடியாது. அவனுக்காகவே அது சிறு குட்டையென தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. அதில் தான் அவன் இறங்கி ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் அங்கும் அவனை சூழ்ந்திருப்பது அது தான். மைத்ரி என்பதே மாயை. மொத்த மந்தாகனியையும் அள்ளத் தவிக்கும் ஹரனை நிறைத்து, அவனை குட்டைக்குள் இருத்தி விலகுகிறாள். கோடி விழி கொண்டு பார்க்கிறாள். 

நாவலில் வரும் ஆண் கதாபாத்திரங்கள் ஹரன், ஜிது பெரியப்பா, விடுதி நடத்தும் முதியவர். மூவரும் நிறைந்தவர்கள். ஆண்மை என்பதே பெண்மையால் நிறைக்கப்படுவது தான் போலும்.

நீங்கள் விமர்சன கூட்ட உரையில் ஹரன் பறவையைப் பார்ப்பது பற்றி சொன்னீர்கள். ஒரு வாசகர் கேட்டதற்கான விடை. அது நாவலில் கஸ்தூரி மிருகை மைத்ரி பார்ப்பதற்கு ஒப்பான தருணம் என்று தோன்றுகிறது. அப்பக்கம் என்ன இருக்கிறது என்ற ஆவலே பறவையை அதை நோக்கி ஈர்க்கிறது. ஆனால் அங்கிருந்து வரும் ஒரு தொடுகை அதன் அறிவுக்கும், உணர்வுக்கும் அப்பாற்பட்டது. கற்பனை கூட செய்ய இயலாதது. அத்தொடுதல் அதற்கு ஒரு படப்படைப்பையே ஏற்படுத்தும். ஒரு வகையில் ஹரனே அப்பறவைதான். முழுதுணர இயலாத ஒரு வெளியின் ஈர்ப்பு. அவ்வெளியிருந்து வரும் மைத்ரியின் தொடுகை. இல்லை, தொடுகை போல. அதன் பின் படபடப்பு. நான் இப்படி புரிந்து கொண்டேன். அவ்வாசகர் மீண்டும் வாசிக்கையில் அவருக்கென ஒரு அர்த்தம் வருமென நினைக்கிறேன்.


நாவலில் ஹரன் மிளிட்ரிகாரரை சந்திக்கும் இடம் ஜெயமோகன் பாணி போல இருந்தது. அது நாவலில் எனக்கு மிகவும் பிடித்த இடம். மேலும் எழுத வாழ்த்துக்கள்.


அன்புடன்,
சியாம்.



வாசிப்பனுபவம் - எழுத்தாளர் வாசு முருகவேல்

வணக்கம் . நான் வாசு முருகவேல். நலந்தானே.  உங்கள் நாவலை இன்றுதான் முழுமையாக வாசித்து முடித்தேன். உண்மையில் எனக்கு கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருக்கிறது உங்களை நினைத்தால். என் வாசிப்பு அனுபவத்தை சிறு குறிப்பாக எழுதியுள்ளேன். உங்கள் கருத்தை அறிந்து கொண்டு முகநூலில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நன்றி


மைத்ரி - நாவல் - அஜிதன்
-

இந்த நாவலின் முதல் பலம் சரளமான மொழி நடை. எத்தகைய கதைக்களமாக இருந்தாலும் சரளமான மொழி நடைதான் கதையை உள்வாங்குவதற்கான முதல் தேவையாக  இருக்கிறது.  எழுத்தாளர் அஜிதனுக்கு இது முதல் நாவல் என்பதை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

இந்த நாவலை வாசித்து முடித்தவர்கள் "இது ஒரு காதல் கதை" என்று மேலோட்டமாக கூறிவிடக்கூடும். ஆனால் ஒரு படைப்பாக அதைத் தாண்டிய பேசுவதற்கான நுண்ணுணர்கள் நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றது. ஒரு நாவல் என்பது ஒரு வாழ்கையை, ஒரு மனிதனின் சுய வரலாற்றை பதிவு செய்வது மட்டுமே என்றல்லாமல், அதன் ஊடாட்டம் என்பது மனித உணர்வுகளால் பின்னப்பட்டிருக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது. நானும் அதை ஏற்கின்றேன். இந்த நாவலின் இரண்டாவது பலமாக ஹரன் என்ற மையப்பாத்திரத்தின் ஊடாட்டத்தன்மையை குறிப்பிட்டு கூறலாம். மைத்ரியை தனித்து அணுகுதல் என்பது வாசிப்பின் தேவைக்கானது தான். புத்திசாலித்தனமும் ஞானமும் ஒன்றல்ல!. இந்த நாவலின் கதை இதுதான் என்று பிடிபட்ட பிறகும் ஆழ்ந்து ஒரு பயணியைப்போல தொடர்ந்து போனதற்கு காரணம் ஹரன் பாத்திரத்தின் ஊடாட்டத்தன்மைதான். மூன்றாவது பலம் எனக்கு முற்றிலும் அந்நியமான நிலப்பரப்பை விரிவாகவும்ஆழமாக என்னுள் கடத்தியமை!. 

மைதிரி போன்ற நாவல்களை நாம் மீண்டும் மீண்டும் வாசிக்க முடியும். தமிழில் இவ்வாறான களங்களை கொண்ட நாவல்கள் உண்டு என்றாலும் கூட மிகவும் குறைவாகவே மீள்வாசிப்பை அவை கோருகின்றன. மறுவாசிப்பின் ஊடாக நீங்கள் இன்னும் ஆழமான நுண்ணுர்வின் புள்ளிகளை கண்டடைவது கூட சாத்தியமாகலாம். இந்த நாவலின் தனித்துவத்திற்கும் அதுவே சான்றாக இருக்கும்!.

30/01/2023


வாசிப்பனுபவம் - எழுத்தாளர் வைரவன் லெ. ரா.
அஜிதன்

மைத்ரி வாசித்து முடிக்கவும் என்னுள் முழுமையாக இறங்கியது வெண்பனி சிகரங்களின் குளுமை. அது மட்டுமே அளிக்கும் சாத்தியமான தனிமை. எங்கோ ஒரு வசந்தத்தின் புல்வெளியில் வெறும்காலில் நடந்து, மந்தாகினியில் பாதங்களை நனைத்த ஓர் உணர்வு. என்னளவில் மைத்ரியும் மந்தாகியினியும் ஒன்றே. மந்தாகினி விட்டு போன ஒற்றை பாதை தான் ஹரன். ஆனாலும் அவனை அவள் தான் முழுமையாய் வளைத்தும் செல்கிறாள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

வைரவன் லே ரா

தளர்ந்தார் தாவளம் - மைத்ரி நாவலை முன்வைத்து.

செளந்தர்.G


கவிஞர் சாம்ராஜ் , மைத்ரி நாவல் விமர்சன கூட்டத்தில், வேடிக்கையாகவும் , தீவிரமாகவும் ஒன்றை சொன்னார் , அதாவது, ''சில நாவல்களில் நிலம் சார்ந்த வர்ணனைகள் வரும்பொழுது பக்கம் பக்கமாக விவரித்திருப்பார்கள், நாம் அங்கே  நேரில் சென்று பார்த்தால் அப்படி ஒரு நிலமே இருக்காது, அல்லது நாவலாசிரியர் தனது கற்பனையில் உருவான ஒரு நிலத்தை மிக மோசமான கதை கூறும் முறையினால் நம்மால் அணுகவே முடியாத ஒரு சித்திரத்தை அளித்திருப்பார். அந்த வகையில் மைத்ரி நாவலில் உள்ள இமயமும் அதன் கிராமமும் இன்னும் அங்கே அப்படியே இருக்கிறது என்று தோன்றுகிறது, நான் என்றேனும் இமயம் செல்லும்போது அஜிதனின் மைத்ரி நிலத்தை அங்கே காண்பேன்.'' என்று சொல்லியிருப்பார்.

அதன் பிறிதொரு அனுபவம் தான் எனக்கு மைத்ரி நாவல் கொடுத்தது. 

கடந்த இருபது வருடங்களில் வருடத்திற்க்கு ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ தொடர்ந்து இமயம் நோக்கி பயணிப்பவன் நான். அஜிதன் விவரித்திருக்கும் நிலக்காட்சிகளும், கிராமம் , மலைகளின் மோனமும், கனவிலும் நினைவிலும் இன்றும் எழுபவை. ஆகவே நாவலின் முதல் ஐம்பது பக்கங்கள் முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டது.

சௌகத் அவர்களின் ''ஹிமாலயம் '' நூல் பயண நூலக ஒரு சிறந்த அனுபவத்தை கொடுத்தது. அதன் பின்,  மைத்ரி  அதன் கதை சொல்லும் முறையாலும் அடிநாதமாக  ஓடிக்கொண்டிருக்கும் இளமையின் துடிப்பும், சமநிலையின்மையும், ஊசலாட்டமும் தான்,  இமாலய சாகச நூல்களிலிருந்தும்  ஆன்மீக பயண நூல்களிலிருந்தும் இந்த நாவலை வேறுபடுத்தி, உயரப்பிடிக்கிறது.  

காதல் தோல்வியும் , அதையடுத்த பயணமும் , புதிய காதலும். என சராசரியாக முடிந்திருக்க சாத்தியமுள்ள கதையை,  தேவையற்ற சோக கீதங்களை இசைக்காமல் , கழிவிரக்கம் வேண்டி நிற்காமல் , 'எல்லாம் சரியாகி விடும்' என்கிற பசப்பு மொழிகள் இல்லாமல், மனித மன உந்து சக்தியின் விசைகளை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு,  
இவையனைத்திற்கும், அச்சாணியாக அமைந்த 'இச்சா சக்தி 'யிடம்  சரணடைந்து விடுகிறது. கதை. 

தெற்கிலிருந்து எப்போதும் யாரேனும் ஒருவர் கிளம்பி இமயம் நோக்கி சென்று கொண்டே இருக்கிறார்கள்.   இமயத்தின் பைராகிகள் ராமேஸ்வரம் நோக்கி வந்துகொண்டே இருப்பது போல.  

ஆன்மீகமாகவோ , அகவிடுதலை தேடியோ , தோல்வியில் அஞ்சியோ, பயணம் எனும் பித்தேறியோ, இது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்த நிலத்தில் நிகழ்கிறது. 

நாவலின் நாயகன் ஹரன் காதல் தோல்வியின் சலிப்பும், விரக்தியும் மேலெழ, இமயம் நோக்கி செல்கிறான்.  சில நாட்களை அங்கே செலவளிக்கிறான் அதில் முக்கியமான மூன்று நாட்கள் தான் அவன் மைத்ரி எனும் கிராம பெண்ணை கண்டு கொள்வதும், மையல் கொள்வதும் , அது வேறொன்றாக முடிவதும். என விரிகிறது கதை.

நாவலுக்கு இதுவரை வந்த விமர்சனங்களில் பெரும்பாலும் ஹரன்-மைத்ரி இளமை குறித்தும் ,  காதல் குறித்தும் அவர்கள் செய்யும் பயண தருணத்தின் அழகியல் குறித்தும் பேசப்பட்டாலும் , நாவலின் அடிப்படையான வேறு ஒன்றும் உள்ளது அது ஆண்களின் உலகம்.

ஹரனின் கொந்தளிப்பும் , முதிரா காதலின் கிறுக்குத்தனங்களும் நாவல் முழுவதும் பேசப்பட்டாலும் , நாவலில் வரும் முக்கியமான சில ஆண்களின் உலகமும் , வாழ்க்கையும் வரும் பகுதிகள் கதைக்கு மேலும் உயிர்சேர்ப்பவை,  உதாரணமாக ஹரன் மைத்ரியுடன் அவளுடைய கிராமத்திற்கு செல்கிறான், அவளுடைய பெரியம்மா பேரழகி என கண்டு வியக்கிறான் , இளமையில் இன்னும் பேரெழிலுடன் இருந்திருப்பாள் என சொல்லிக்கொள்கிறான், ஆனால் பெரியம்மாவிற்கு ஒரு காதல் தோல்வி இருக்கிறது அவர் மைத்ரியின் திருமணமாகாத மற்றுமொரு பெரியப்பாவே தான், இந்த இருவரையும் சந்திக்கும் ஹரனை, பெரியப்பா மட்டுமே மேலும் நன்றாக புரிந்து கொள்கிறார், ஹரனை ஆசிர்வதிக்கையில் ஒரு தந்தைக்கே உரிய பதட்டமும் , பாசமும் ஒருங்கே சேர ஆசீர்வதிக்கிறார், அந்த தருணத்தில் பெரியப்பா சொல்ல விரும்புவது ' உனக்கும் இது நிகழலாம் , இது இயல்பான ஒன்று ,ஆகவே தயாராயிரு ' என்பது தான்.

அடுத்த முதியவர்,  ஹரன் ஒரு விடுதியில் தங்கி இருக்கிறான் அதன் மேலாளர் . 
இளவயதில் மனைவியை இழந்தவர், மறுமணம் செய்து கொள்ளாதவர் இன்றுவரை அவள் நினைவில் வாழ்பவர், அவரும் ஹரனின் அலைக்கழிப்பை கண்டு கொள்கிறார், அவன் உடல் நலிந்து படுக்கையில் வீழ்கையில், ஒரு தந்தை என பணிவிடை செய்கிறார், அந்த உபசரிப்பில் தெரிவதும் ஹரன் அடையப்போகும் துயரினை கண்டுகொண்ட ஒருவரின் கரிசனம் தான். 

இந்த இருவரின் சித்திரமும்  பங்களிப்பும் கதையின் இறுதி வடிவத்திற்கு ஒரு முன் மாதிரி எனலாம்  

தன்முனைப்பு, தன்னை சுற்றியே மொத்த பிரபஞ்சமும் இயங்குகிறது என்கிற சுயமும், துரும்பின் அளவே பெற்ற சில வாழ்வியல் வெற்றிகளும், அதன் மீது கொண்டாட்டமும் கொண்டவனுக்கு, தெய்வங்கள் கனிந்து மேலும் மேலும் கொடுத்துக்கொண்டே இருப்பதில்லை, அவனது சுயத்திற்கு நிகரான ஒன்றை முற்றிலுமாகவோ , சிறிது சிறிதாக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்ளோ மொத்தமாக அபகரித்து விட்டு, அடுத்து என்ன செய்வாய்? என்கிற வெறுமையை முன்னிறுத்திருக்கிறது. அப்படியான ஒருவன் தான் ஹரன் , நாவல் முழுவதும் அவனுடைய எண்ணங்கள், சிந்தனைகள், சொற்கள், செயல்கள், என  அனைத்தும் 'நான் ....நான் ....நான் '' என்றே துடித்துக்கொண்டிருந்தது. அப்படி துடித்தவனுக்குத்தான் 'உன்னதம் என நினைத்த காதல் அவனிடமிருந்து பறிக்கப்படுகிறது.  அதிலிருந்து எரிச்சலும் சலிப்பும் , தோல்வியை கண்ட இளைஞன் எனும் நிலைக்கு செல்கிறான் 
ஆக,  அவன் மேல் இரக்கம் கொள்வதற்கோ, பரிதாபம் அடைவதற்கோ ஏதுமில்லை.  'சுயம்' மட்டுமே அனைத்தும் என சிந்திப்பவனுக்கு இது நிகழும் என்பது மாறாவிதி.  அதில் ஒரு நல்லூழாக, இமய பயணத்திலும் , பிரமாண்டமான அதன் இருப்பிலும் அழகிலும் மீட்டெடுக்கப்படுகிறான். 

ஹரனின் காதல் துயர் அல்லது அலைக்கழிப்பு என்கிற   இடத்தில எந்த மனிதருடைய துயரையும் பொருத்திப்பார்த்துக்கொள்ளலாம், துயருக்குப்பின் அவர் என்னவாகிறார் என்பதே முக்கியமான ஒன்று, 
ஹரனுக்கு இமயம் எனும் மாபெரும் ஆற்றலும் அதை பரிமாற்றம் செய்ய மைத்ரி எனும் மிகக்குறுகிய கால காதலும் இருந்தது. 
இப்படி ஒரு மாபெரும் சக்தி எங்கேனும் இருக்குமானால் தளர்ந்து ஓய்ந்து போன ஒவ்வொரு உயிருக்கும் சிறிது இளைப்பாறல் என , மீட்டெடுத்தல் என , மீண்டெழல் என சில சாத்தியங்களை கண்டடைந்து, வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடலாம், 
 அந்த மாபெரும் சக்தி என்பது , அறிவுத்தேடல் , இசை , கலை , பயணம், ஆன்மீகம் என எதோ ஒரு வடிவில் இருக்கலாம். 

வைணவத்தில் திருமாலுக்கு 'தளர்ந்தார் தாவளம்' என ஒரு வியாக்யானம் உண்டு. தாவளம் என்பது சிறிது இளைப்பாறும் அல்லது 'தஞ்சமென' செல்லக்கூடிய ஒரு இடத்திற்கு பொருள். 
அதாவது திருமால் தளர்த்தவர்கள் அனைவர்க்கும் தஞ்செமென அருள்பவன் என்கிறது பெரிய திருவந்தாதி.

அப்படியான தாவளம் தான் ஹரனுக்கு மைத்ரியும் , இமயமும்.
  
தத்துவார்த்தமான கேள்விகளும்  உருவகங்களும், சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, நாவலுக்கு 'வெளியே' நிற்கிறது என்கிற சித்திரத்தைத்தான் தருகிறது எனினும் 
இதை முதல் நாவலிலேயே முயற்சி செய்து பார்த்த அஜிதனுக்கு வாழ்த்துக்கள். 



செளந்தர்.G

வாசிப்பனுபவம்- பா. முருகானந்தம்


அன்புள்ள அஜிதனுக்கு

பாராட்டுகளும், வாழ்த்துகளும் கூடவே ஆசிகளும்.

இயேசு ராஜா மண்டையைத் தட்டிய கணம் முதல் மைத்ரி படித்தேயாக வேண்டும் என்ற உந்துதல் எழுந்தது. புத்தகக் கண்காட்சியில் நூலாசிரியரின் கையெழுத்துடன் வாங்கிய உவகை வேறு.

ஒரே மூச்சில் படித்து முடிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்தேன். குடியரசு தினத்தன்று படிக்க எடுப்பதற்கு முன் Uunchai திரைப்படம் பார்க்க வேண்டிய சூழல். அந்த படத்தின் தாக்கத்தினால் Everest Base Camp trekking குறித்தே இரண்டு நாட்களாக எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

இன்று மதிய உணவுக்குப் பிறகு நூலை எடுத்து வாசிக்க ஆரம்பித்து எங்கும் நகராமல் வாசித்தேன் - உடலளவில்..  ஆனால், மனம் முழுவதும் மைத்ரியின் நிலத்தில் தான்.

Portrayal of Landscape one of the best, for sure. 

ஹரனின் வாழ்க்கையில் ஒரு சிறு துளியில் (3 நாட்கள்) நடைபெறும் நிகழ்வுகள் தான் இப்புனைவெனினும் ஹரன் குறித்து முழுமையாக சித்தரித்து அவனின் மணப்போராட்டங்கள், தவிப்புகள், தடுமாற்றங்கள், பெரும்பாலான சமயங்களில் அவன் காட்டும் நிதானம், பக்குவம் ஆனால் அவற்றையும் மீறும் மன சஞ்சலங்கள், குற்றவுணர்வு இறுதியில் அந்த மகாசக்தி மைத்ரி அவனை இரட்சித்து, மீட்டு வாழ்வின் பேருண்மையை, தரிசனத்தின் திறப்பை அவனுக்குக் காட்டி .. அடடா.. அற்புதம். 

மைத்ரி - மகாசக்தி, ஜகன்மாயா வேறென்ன சொல்ல. கண்களில் நீர்.
மைத்ரியைப் படித்தால் லா
ச ரா அண்ட் தி ஜா நிச்சயம் பெருமிதப்பட்டு இருப்பர்.

பகுதி 3 you have outshone Jeyamohan at some points and definitely the classic portions.

உங்களை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் ஒரு முறை ஆசிர்வதித்து, நட்புடன் உங்கள் கரங்களைக் கோத்துக் கொள்ள விருப்பம்.

என்றும் அன்புடன்

பா.முருகானந்தம்


வாசிப்பனுபவம்- நந்தகுமார்


அன்புள்ள அண்ணே உங்களை விட ஐந்து ஆண்டுகள் இரண்டு மாதம் எட்டு நாட்கள் சிறியவன் நான் .

15-09-2022 அன்று  வாசிக்க ஆரமித்து 23-09-2022 அன்று முடித்த நாவல் மைத்ரி

மைத்ரி எனக்கு கொடுத்த அனுபவம் பல அதில் ஒன்று நான் அந்த ஹரன் ஆக இருக்க கூடாதா என்ற ஏக்கம் . அந்த மைத்ரி யை  என் வாழ்வில் சந்திப்பேனா என்ற ஆவல் சாதாரணமானவர்களின் ஆசைகளாக தோன்றலாம் ஆனால் முற்றும் உணர்ந்த முனிவர்கள் வாசித்தாலும் இந்த எண்ணம் கொள்வார்கள் என்பது என் எண்ணம் .

மணிரத்னம் இயக்கத்தில் ராஜீவ்மேனன் ஒளிப்பதிவில் ,ஏ .ஆர் .ரஹ்மான் இசையில் ஒரு சிறந்த படம் பார்த்தது போன்ற அனுபவம் .

வாழ்வில் எப்படியாவது இந்த கதைக்களம் நடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ரசிக்க வேண்டும் .

மைத்ரியில் நான் புரிந்து கொண்டஉணர்ந்து கொண்ட பல தருணங்கள் உள்ளன அதில் ஒன்று அத்தியாயம் நான்கில் ஜன்னல் கண்ணாடியின் உள்ளே நின்று கொண்டு மறுபுறம் வந்த அமர்ந்த அந்த அதிசய பறவையை ஒவ்வொரு அங்கமாக ரசிக்கும் ஹரனின் காட்சியில் எனக்கு புரிந்தது ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மானுடனும் தன் முன் கண்ணாடி என்ற ஒரு பொருளை வைத்து மறுபுறம் உள்ள விவரிக்க முடியா இந்த பிரபஞ்ச வெளியை விளங்கிக்கொள்ள விழைகிறான் ,ஹரன்  தன் ஆள்காட்டி விரலால் ஒரு கணம் அதன் அலகை தொட்டு கொண்டது போல் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தருணத்தில் உணர்ந்து கொள்கிறோம் தெய்வீக இயற்கையை அப்போதும் நம் முன் கண்ணாடி உள்ளது .

 

'வாழ்நாள் எல்லாம் என்னை யாரோ தாங்கிக்கொண்டே தான் இருந்திருக்கிறார்கள் என்ற வரி சில நிமிடங்கள் என்னை மூச்சு விட வைத்தது .

 ஹரனும் மைத்திரியும் பேருந்தில் கேட்கும் கட்வாலி பாடல் அவர்களுக்குள் ஏற்படுத்தும் உளஇணைப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது , என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் , கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் நான் வேலை செய்யும் போது கடலுக்குள்  இரண்டு கிலோமீட்டர் தூரம் பேருந்தில் பணியாட்களை கொண்டு சென்று விடுவார்கள்  அதிகாலை 7.15 , அந்த பேருந்தில் என்னையும் ஓட்டுனரையும் சேர்த்து நான்கு பேர் மட்டுமே தமிழர்கள் , மற்ற அனைவரும் வடநாட்டவர்கள் , பேருந்து சைட் இல் சென்று நின்றதும் ஒரு பாடல் ஆரம்பித்தது ' உன்ன விட ' விருமாண்டி பட பாடல் முடியும் வரை ஒருவர் கூட இறங்கவில்லை , அவ்வளவு அமைதி ,15 நிமிடம் தாமதம் இருந்தும் ஒருவர் கூட இறங்கவில்லை , பாடல் முடியவும் படியில் இறங்கும் ஒவ்வொருவரின்  முகமும் காண்பித்ததை விவரிக்க முடியவில்லை என்னால் .

 ஓநாய் குலச்சின்னம் வாசித்து முடித்து பலநாட்களுக்கு பின்பு எனக்கு தோன்றியது , மங்கோலிய ஓநாயாக பிறக்க வேண்டும் என்ற மிகுந்த ஆசை கொண்டேன் , ஒருவேளை நான் முன் ஜென்மத்தில் அப்படி பிறந்திருப்பேனோ என எண்ணினேன் , அதே போல் இப்போது நான் தேவதாரு மரமாக அந்த மலை உச்சியில் நின்று  அந்த குளுமை மலையின் வாசம் , மலையின் சப்தம் , ஒவ்வொரு அசைவுகளையும் ஒரே இடத்தில் நின்று அனுபவிக்க ஆசை படுகிறேன் ,.

மைத்ரி நாவல் என்னுள் எப்போதும் இறவா தன்மையுடன் இருக்கும் .

 

தங்களின் முதல் சிறுகதையை படித்தேன் எதிர் பார்க்க வில்லை அனைத்தையும் , ' ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் ' தலைப்பே சரியான தலைப்பு அதிலேயே உங்கள் பார்வை தெரிகிறது .

 

ஒரு வரி திருக்காயம் கொண்டு தழும்பேரிய தன் மென்கரத்தால் சொர்க்கவாசலை சுட்டி, ”போல உள்ளஅழுவுகாம் பாரு” இந்த வரியில் நான் புரிந்து கொண்டதை எனக்கு எழுத தெரியவில்லை.

நன்றியுடன் - நந்தகுமார்



மைத்ரி -  தாய்மையின் முகம்

-வேலாயுதம் பெரியசாமி



நாராயண குரு சொன்னது கங்கையில் குளித்தால், கைலாசத்திற்கு சென்றுவந்தால் பாவம் நீங்கும் என்று சொல்வதெல்லாம் பொய்யல்ல,  இயற்கையின் விரிவின் முன் நிற்கையில் மனித மனமும் ஒரு கணம் விரியும் அந்த கணமே கடவுள் உள்ளமரும் தருணம்“.

விரியும்தோறும் எடை குறைகிறதுநாவலில் வரும் ஒரு வரி.

இதையே நாவலின் சாரம் என்று எண்ணுகிறேன். ஹரன் சுமந்து வந்த எடை என்ன? அந்த எடையை எப்படி இழக்கிறான்? விரிந்து, இழந்து அவன் அடைவதென்ன? இந்த கேள்விகளுக்கு எல்லாம் மைத்ரி நாவல் எப்படி பதிலளிக்கிறது. 

முதல் கேள்விக்கு: சதியை சூலாயுதத்தில் ஏந்தி வெகுண்டு அலையும் சிவன்தொன்மம் வழியே கௌரியின் நினைவை சுமந்து அலையும் ஹரன்.

இரண்டாவது கேள்விக்கு:  அந்த சிவனை அதிலிருந்து மீட்டு இவ்வுலகின் இருமையை உணர்த்தி மாயையிலும் அவனை பங்குபெற செய்த பார்வதி - மலைமகள் தொன்மம் வழியே மைத்ரி-ஹரனை அவளது தூய்மையின், கலங்கமின்மையின், நிபந்தனையின்றி அளிக்க மட்டுமே செய்யும் அன்பின், தாய்மையின் வழியே மாயையை உணர்த்த வருகிறாள். ஆனால் இங்கே  அவள் அவனை நீங்கி செல்கிறாள் அதிலிருந்தே தன்னையும், பிரபஞ்ச லீலையையும் ஹரண் கண்டடைகிறான். 

மூன்றாவது கேள்விக்கு: அது ஒரு அகநிலை.

நான் அடைந்திராத ஒரு விளக்கவியலா ஆன்மீக நிலை. எனவே ஜெயமோகன் நமீபிய   பாலைவனத்தில் அவர் அடைந்த உணர்வாக இதை சொல்கிறார், அதை முன்வைக்கிறேன் 

மணல்மேட்டின் உச்சியில் அமர்ந்துகொண்டேன். நெடுநாட்களுக்குப் பின் நான் அற்ற நிலை கைகூடியது. மணலும் வானமும் ஒளியும் காற்றும் மட்டுமே அங்கே இருந்தன. விழித்துக்கொண்டபோது இருத்தல் தித்தித்தது. அடைவதற்கோ வெல்வதற்கோ ஏதுமில்லாத இயல்புநிலைப் பேரின்பம் அது” 

இந்த நிலையை தான் ஹரண் அடைகிறான் என்று தோன்றுகிறது.

அவன் கௌரியை பிரிந்து செய்வதறியாது கேதர்நாத்துக்கு பயணம் செல்கிறான். ஏன் அங்கே பயணம் செல்கிறான் என்று அவனுக்கே தெரியாது, ஒரு இந்திய மனம் செயல்படுவது இப்படித்தான். நாம் அறியாத ஆழத்தில் நம் பண்பாட்டில், மரபிலிருக்கிறது அது. நாராயண குரு அதைத்தான் சொல்கிறார். என்னுடைய சுய அனுபவத்திலிருந்தே இதை சொல்கிறேன். என்னுடைய இளமையில் எல்லா நெருக்கடிகளிலும் நான் செல்வது ஏதோ ஒரு மலைக்குத்தான் இப்படி மலை மலையாக காரணமின்றி ஏறி அலைந்திருக்கிறேன். நம் மனமே அங்கே நம்மை அழைத்து செல்லும் அந்த விரிவை காணச்செய்து வழியனுப்பும். 

இந்த நாவல் நமது ஆழத்திலும், வேர்களிலும் இயங்கி கொண்டே வெளியே விரிந்திருக்கும் இயற்கையில் லயிக்கிறது. இது உள்ளும், புறமும் ஹரன் தனது ஆதி நிலைக்கும், தூய்மைக்கும் சென்று சேரும் பயணம் அவனை அழைத்து செல்வது மைத்ரி. அவன் ஒரு இருப்பு மட்டுமே, அதில் இழையோடும் ஆற்றல் அவள்.

மைத்ரி அவனை புறத்தில் இங்கே பொருண்மையிலிருக்கும் நாகரீகத்தின் கருமை படியாத நிலங்களுனூடேயும், மனிதர்களினூடேயும், வாழ்க்கையுனூடேயும் அழைத்து செல்கிறாள் ஆனால் அந்த பொருண்மைக்கு அடியில் கலையாக, சிலையாக, விழாக்களாக, இசையாக, தொன்மக்கதைகளாக மாற்றி வைக்கப்பட்டிருப்பவற்றால்  

அவனறியாது அவன் ஆழத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 

ஒரு நீள்சரடுடன் அவனை பொருத்திவிடுகிறாள். அதன்வழியே அவன் ஆழத்தில் விரிதலும், கணடடைதலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது அதன் இறுதியில்

ஹரனை வெறும் ஆணிலிருந்து ஒரு பேரிருப்பின் பகுதியாக உணரச்செய்கிறாள், மைத்ரி. (லட்சம் கோடி விண்மீன்கள் அணிந்து அவள் என்னை சூழ்ந்திருந்தாள்).


ஜெ வுடைய வார்த்தைகள்:

இயற்கையின் தன்னியல்பு பெண்மைதானோ என்ற எண்ணம் எழுந்தது. ஆண்மை என்பது அதை அறியும் தன்னியல்பு மட்டும்தானா?”

இயற்கையின் தன்னியல்பை அறியும் ஆண்மை, அதன் தனித்த அகங்காரத்தை இழந்து பெண்மையுடன் முயங்குகிறது அங்கே தான் மைத்ரி நிகழ்கிறாள். மைத்ரியுடன் இருக்கும்போது பேரழகாக தெரிந்த இயற்கை அவளும் பிரிந்து சென்றபிறகு இறுதியில்  கோரமாக (அது தான் சதியை தூக்கியலைந்த சிவமா?) தெரிகிறது. அந்த கணத்திற்கு பிறகு தான் ஹரன் அவனது தாய், கௌரி, மைத்ரி அனைவருமே ஒன்றின் பல வெளிப்பாடுகள் தான் என உணர்கிறான், தனக்குள் இருந்த தன்முனைப்பை கிழித்தெரிந்து தரையில் விழுகிறான் ஒருமையை உணர்கிறான். மைத்ரி என்றால்  ஒன்றாதல் - ஒன்று மட்டுமே என ஆதல். அந்த ஒன்றாதலின் வழியே நிகழும் சமநிலையைதான் ஹரன் இறுதியில் அடைகிறான். 

இந்த நூல் ஒரு அதிகாலை மென்மழை போல, ஒளி ஊடுருவும் பளிங்கு கண்ணாடி போல, பால் வெண்மை கொண்ட சிறு மலர் போல, அன்று பிறந்த சிறுமகவென தாயின் சிறு ரத்த தடங்கள் இருந்தாலும் அதிதூய்மையான பிரதி. இதற்காகவே தமிழிலக்கியத்தில் மைத்ரிக்கு நீங்கா இடம் இருக்கும். ஜெ குமரித்துறைவியில் அடைந்ததிலிருந்து நீங்கள் தொடங்கி இருக்கிறீர்கள். அதன் வெளிச்சம் உலகின் மகத்தான பெருங்கலைஞனால் நீண்ட பயணத்திற்கு பின்பு அடையபெற்றது. அந்த வெளிச்சத்திலிருந்தே தொடங்கிய மைத்ரி மற்றுமொரு பெருங்கலைஞனின் முதல் பாதச்சுவடு என்றே உணரவைத்தது. 

(உங்களின் தர்கத்தின் ஆழத்தை நேரில் பேசி அறிந்திருக்கிறேன் ஆனால் கவித்துவத்தை    மைத்ரியே எனக்கு காட்டியது, இரண்டும் சரிவர கலந்திருப்பதனாலேயே உங்களை பெருங்கலைஞன் என்று நினைக்கிறேன்)


அன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி

 ***

 

அன்புள்ள வேலாயுதம் பெரியசாமி,

உங்கள் கடிதம் வாசித்தேன், மைத்ரிக்கு கிடைத்த மிக சிறந்த வாசிப்புகளில் ஒன்று என்று தயங்காமல் சொல்வேன். இந்திய ஆழ்மனது இயல்பாக செல்லும் திசையை நீங்கள் கூறியிருந்தீர்கள். அதுபோல சதி தேவியை இழந்தபின்னான சிவனின் வெறுமை, கசப்பு. மீண்டும் மண்மகளாக, மலைமகளாக அவள் பிறந்து வந்து சிவனை ஆற்றுபடுத்துவது என முழுமையாக நாவலின் புராண உருவக கட்டமைப்பை பேசியிருக்கிறீர்கள். ஒரு வாசகரிடம் ஒரே நேரத்தில் அறிவுப்பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் தொடர்பு கொள்ளுதலே முதன்மை இன்பம். அது அடைய சாத்தியப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி. 

மைத்ரியின் வாசிப்பு தளம் மேலும் மேலும் வளர்வதை இது காட்டுக்கிறது. அது நிறைவளிக்கிறது.

அஜிதன்

மைத்ரி வாசிப்பனுபவம் - அரவின் குமார்


அஜிதன் எழுதியிருக்கும் முதல் நாவலான மைத்ரி நாவலை வாசித்தேன். அகச்சமநிலையின்மையும் உளப்பதற்றமும் கொண்டிருக்கின்ற ஹரன் எனும் இளைஞனொருவன் ஹர்த்துவாரை ஒட்டி இருக்கும் மலைப்பகுதிகளுக்குச் செல்லும் பயணமே நாவலின் பின்னணியாக இருக்கின்றது. ஆழ்ந்த தனிமையும் தன்னில் ஆழ்ந்து போனவனாகவும் இருக்கின்ற ஹரனுக்குக் கெளரி உடன் ஏற்படும் காதல் இயல்பான பதற்றங்களையும் நிலைக்குலைவையும் அளிக்கின்றது. தன்னில் ஆழ்ந்து போயிருப்பவர்கள் மற்றவர்களுடனான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் போது இயலபாகவே மேழெழுந்து வரக்கூடிய தன்னகங்காரச் சீண்டல்கள் அதிலிருந்து மீண்டு எழும் தன்னிரக்கப் பாவனைகள் ஆகியவற்றினூடாக ஹரனின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. கெளரி உடனான உறவைக் கைவிட்டு ஹரிதுவாருக்கு வருவதென்பது ஒருவகையில் தன்னை மீளக் கண்டடையும் பொருட்டுத்தான். அந்த உளநிலையின் வெளிப்பாடாகவே எவ்விதத் திட்டமிட்ட இலக்கின்றி ஹரித்துவாரை ஒட்டியிருக்கும் சோன்ப்ரயாக் பகுதிக்கு வருகிறான். 

மைத்ரி நாவலில் வரும் இயற்கைச் சித்திரிப்புகளே அதன் பெரும் பலமாக அமைந்திருக்கின்றன. உயரமான மலையடுக்குகளான சோன்ப்ரயாக் பகுதியின் அழகிய இயற்கைச் சித்திரிப்புகளை எழுத்தில் மிக நெருக்கமாக எழுதியிருக்கிறார். நேரடியாகக் காண்பதைப் போன்ற துல்லியத்துடன் இயற்கைச் சித்திரிப்புகள் அமைந்திருக்கின்றன.  இயற்கையின் அழகும் விந்தையும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத வியப்பை ஏற்படுத்துகிறது.  அந்த வியப்பை ஆன்மீகத்தளத்தில் பொருள் கொள்ள முயல்கின்றனர்.  அவற்றை வெவ்வேறு மனநிலையின் படிமமாக, குறியீடுகளாக மாற்றும் தொன்மத்தை உருவாக்குகின்றனர். சோன்ப்ராயாக்கின் மலையடுக்குகளை ஒட்டியப் பயணத்தில் ஹரனுக்கு மைத்ரி சொல்லி வரும் ஒவ்வொரு தொன்மமும் படிமங்களும் அதையே நினைவுறுத்துகின்றன.  ஹரனுக்குள் இருக்கும் தன்னகங்காரச் சீண்டலை இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன்னால் அழித்துக் கொள்ளவே விரும்புகிறான். அவன் தன்னை முழுதற ஒப்பளிக்கும் இடமாகவே சோன்ப்ராயாக்கை நாடி வருகிறான். 

 தன்னை ஒப்புக் கொடுப்பதன் மூலமாக தன்னில் இருக்கும் தன்னகங்காரச் சீண்டலைக் கடந்து விட ஹரன் முற்படுகிறான். சோன்ப்ராயாக்கில் காணும் மைத்ரி எனும் பெண் மீது நெருக்கம் ஏற்படுகிறது. முதல் சந்திப்பிலே அவளின் மீது உருவாகும் ஈர்ப்பு மெல்ல அவளிடம் சரணடைந்து கொள்ளும் புள்ளிக்கு இட்டுச் செல்கிறது. தன்னை ஏந்தி கொள்ளும் அன்னையாக, தேவியாக அவனுடைய மனம் கற்பிதம் செய்கிறது. அதன் பிறகு, அவளுடைய வீட்டுக்குப் பயணம் செய்கிறான். நாவலின் பெரும்பகுதியாக இப்பயணமே அமைகிறது. அந்தப் பயணத்தினூடே உத்தரகண்டில் இருக்கும் கட்வாலி மொழி பேசும் மக்களின் பண்பாடு, உணவு பழக்க வழக்கங்கள், தொன்மங்கள் ஆகியவை நாவலின் பெரும்பகுதியாக அமைகின்றது. ஹரனின் உளம் சமநிலையடைந்து புதிய நிலத்தின் விந்தைகளையும் அந்நியத்தன்மையையும் கூர்ந்து கவனித்து வருவதாகவே சித்திரிப்புகள் அமைகின்றன. ஒருவகையில், அவனுடைய கடந்த காலத்தைக் காட்டிலும் மிக இயல்பாக அவனால் வெளிப்பட முடிந்த சூழலை அந்த நிலம் ஏற்படுத்துகிறது.

முதற் சந்திப்பில் மைத்ரியில் வெளிப்படும் அழகு அவனுக்குத் தன்னிரக்கம் மேலிடச் செய்கிறது. அடுத்த கணமே, அவள் பார்வையில் வெளிப்படும் கனிவு, அவள் முழுமையாகச் சரணடையச் செய்கிறது. அந்தப் பயணத்தினூடே, மைத்ரியுடனான நட்பு காதலாகப் பரிணமிக்கின்றது.  ஹரனில் இருக்கும் குழந்தைமையை மைத்ரியால் உணர முடிகின்றது. அதைப் போல மைத்ரிக்குள் இருக்கும் ஏக்கத்தை ஹரன் நிறைவு செய்கிறான். மைத்ரிக்கு அவள் வாழ்நிலத்தின் மீதிருக்கும் ஈர்ப்பும், ஏக்கமும் அவளின் செயல்களில் வெளிப்படுகிறது. சோன்ப்ரயாக்கின் கங்கி மலைப்பகுதியின் வண்ணப்பூக்கள், நெடித்துயர்ந்த தேவதாரு மரங்கள், விரிந்த புல்வெளிகள், மலைகள் அத்தனையையும் மைத்ரி அறிந்திருக்கிறாள். ஹரனின் மனதில் இருக்கும் தன்னகங்காரம் முற்றிலுமாக ஓய்ந்து மைத்ரிக்குள் தன்னை முழுதளிக்கச் செய்கிறது. 

தனிப்பயணமும் அதில் கிடைக்கும் அனுபவங்களும் உளச்சமநிலையின்மையை சரிபடுத்தும் என்பது சமூக ஊடக வெளிகளில் அதிகமாகச் சொல்லப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. ஆனால், ஹரன் போன்று தன்னில் அமிழ்ந்து போயிருக்கக்கூடிய ஒருவனுக்கு அழகை நேர்காணும் போது ஏற்படும் உணர்வை இந்நாவல் மிகச் சிறப்பாகக் கடத்தியிருக்கிறது. நாவலின் இறுதியில் வெப்ப நீர் குட்டையில் குளித்து முடித்தவுடன் ஹரன் விடுபடலொன்றை உணர்கிறான். வெப்ப நீர்க்குட்டையில் இருந்து எழுந்ததும் கோடிக் கோடி விண்மீனாக அவனுக்குத் தெரிவது இயற்கையும் மைத்ரியும் அவனுக்களித்த விடுதலையாக உணர முடியும்.

அரவின் குமார், மலேசியா



ஜி.எஸ்.எஸ். வி. நவின்

"பஷீரின் மதில்கள் நாவலுக்குச் சொன்னது போலவே மைத்ரியிலும் கதையோட்டத்தை விறுவிறுப்பாக்கும் நாடகீக தருணங்கள் இல்லை. ஆனால் பஷீரின் மதில்கள், ஜெயமோகனின் அந்த முகில் இந்த முகில், தாஸ்தோவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் நாவல்கள் தொட்ட அதே மைய தரிசனத்தை மைத்ரியும் தொட்டிருக்கிறது. அங்கிருந்து விரிந்து ஹரன் தனக்கான விடுதலை சென்றடையும் தொலைவில் நாவல் முடிகிறது."


மைத்ரி - எஸ் அசோக்

 

This novel is the journey of a young man named Haran, as he is frustrated with a broken relationship he embarks on a journey to Kedarnath. On this journey, he chances upon meeting Maitri, a young girl from the mountains of Uttarakhand. Through the love that blossoms between them, Haran is transformed, it seems like he has regained something pure and spiritual.

 

The central success of the novel is the incredible details with which the physical world is captured, be it the beauty of nature or the beauty of Maitri, the novel is a visual treat. The novel also brilliantly documents the cultural roots of people living in the Himalayas. It is through this journey Haran sees the wonder of life and nature, his anguish and frustrations are dissolved in the presence of Maitri, and Haran seems to be uplifted and sort of achieves salvation.

 

The novel's central theme is that through nature and the grandness that surrounds us one can find salvation. Nature and life are filled with duality, beauty is balanced by the ugly, life by death, sometimes they are two sides of the same coin. In the novel, we can find parallels of Sankhya philosophy in the novel, where the Prakriti with its three Gunas is a blessing and a curse. Also, there is a line when Maitri says the equivalent word for love is 'Maya'. Maya in Indian philosophy is the world of appearance. It is sometimes seen as a negative word that prevents people from achieving moksha, but in this novel, Haran sees the beauty of Maya. In Vishishtadvaitha philosophy Maya is also a jewel of Vishnu, through which we achieve happiness. Sometimes one cannot achieve happiness without sadness and they are part of Maya and an essential part of life. In this way, the novel echoes sometimes the lines of Bharathi in the song Nirpathuve.

 

In the novel, Maitri is also the Sakthi who guides the Sakta. She is at the same time the giver of pleasure when she takes Haran through the arduous journey but also the one who gives him the pain the next day. Haran achieves a moment of complete transformation at the end when he sees Maitri everywhere.

 

There are multiple layers and multiple ways to think about this brilliant novel

 

goodreads.com தளத்தில் இருந்து  


எழுத்தாளர் கமலதேவி

சென்ற மாத புரவி அச்சிதழில் எழுத்தாளர் கமலதேவி அவர்களின் மைத்ரி நாவலை குறித்தான மிகச்சிறந்த செறிவான கட்டுரை இடம்பெற்றது. இப்போது அது அவரது வலைதளத்தில் வாசிக்க கிடைக்கிறது. 

அச்சிதழில் மதிப்புரை என்பது தீவிர இலக்கியத்தை பொருத்தவரை ஒரு ஏற்புச்சான்று. அந்த வகையில் எதிர்பாராமல் வந்த இந்த அழகிய கட்டுரையை பெருமையாக கருதுகிறேன். மிக்கநன்றி கமலதேவி.  




"இந்நாவலின் வெகு சிறப்பான அம்சம் என்பது வடிவத்தின் எல்லைகளை உணர்ந்து அதற்குள் முழுமையாக ஓருலகை உருவாக்கி காட்டியமைதான். குறைவான பக்கங்களுக்குள்ளகவே பரந்த ஒரு நிலப்பரப்பின் பல்வேறு முகங்கள் மிக சிறப்பாக வெளிப்பட்ருக்கின்றன. சிலம்பிசைக்கும் மந்தாகினி கரையோரம் தொடங்கி கரித்தோல் உடுத்தி எழுந்து நிற்கும் கேதார்நாத் சிகரம் முடிய…"

- கிஷோர் குமார்


மைத்ரி: ஒரு புன்னகை


அன்புள்ள அஜிதனுக்கு,

வெள்ளிமலை சந்திப்பிற்கு பின் தங்களுடைய மைத்ரியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்வெளியான அறிவிப்பு வந்தும் விஷ்ணுபுரம் தளத்தில் புத்தகவிற்பனை தாமதமாகவே துவங்கியதுசிறிதும் தாமதியாமல் பெற்று வாசிக்கத்துவங்கிவிட்டேன்என்னுடைய வேகத்திற்கு ஐந்துமணி நேரத்தில் வாசிக்குமளவே (குறு)நாவல் இருந்தும்இரண்டுநாட்கள் இமயத்தை கிரகித்தபடி இருக்கவேண்டுமென சிறிது சிறிதாக உட்கொண்டேன்மைத்ரியிலிருந்து விழித்ததும் புன்னகைத்தேன்ஆம்அஜிதன் தத்துவாதிக்குள் வாழும் கவிமனம்.

சந்திப்பில் நான் எவருடனும் அதிகம் உரையாடவில்லைதங்களிடமும் தான்அனைவரையும் அவதானித்தபடியே இலக்கிய வாசகர்திரளில் இருப்பதே போதுமென்றிருந்ததுதங்களது தத்துவ வகுப்பை உள்வாங்க இயலாமல் சிறிதுநேரத்தில் நெளியத்துவங்கிய ஆள்தான் எனினும் தத்துவத்தை கற்பதற்கான ஒரு தொடக்கத்தை உந்துதலை நான் தங்களிடம் பெற்றுக்கொண்டதாகவே உணர்கிறேன்தற்போது மதுரை விஷ்ணுபுரம் நண்பர்களுடன் இணைந்து இந்திய தத்துவங்களை கற்று விவாதித்து வாசித்து வருகிறோம்படிப்படியாக மேலைத்தத்துவத்திற்குள் வந்துவிடுவோம்.

தங்களது தந்தையின் “காடு” நாவலே மைத்ரிக்கு ஒரு உந்துதலாக இருந்தது என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்காடு நாவலை வாசித்தே நான் ஆசானின் எழுத்துலகிற்குள் நுழைந்தேன்அதை வாசித்த பொழுதில் முதிர்ச்சியற்ற ஒரு இளமையின் காதல் தவிப்பு எனக்குள் இருந்ததுஇன்று அதே பரவசத்தை மைத்ரியும் அளிப்பதைக்கண்டு ஆச்சர்யப்படுகிறேன்சோன்ப்ரயாக்கின் மலைத்தொடர்கள்கதிரொளியில் ஜொலிக்கும் ஆதிசிவனின் தலைமந்தாகினியின் ஆலகாலம் இறங்காமல் பற்றிய மென்கரங்கள்அலகனந்தும் மந்தாகினியும் விளையாடும் நிலம்கட்வாலி கிராமத்து மனிதர்கள்கட்வாலியின் இசைஞர்கள்தேவதாருக்காடுகள்மாத்ரிகளால் மயக்கப்பட்ட ஜீது பஹட்வால்ஊதாவும் சிவப்பும் கொண்ட மாயத்தன்மையான மார்ச்சூ தானியக்கதிர்கள்கச்சர்களில் பயணிக்கும் ஹரனும் மைத்ரியுமென அகவிடுதலைப் பயணமாக இந்நாவல் எனக்குள் விரிந்தெழுகிறது.

நிலக்காட்சிகளைக்காணும் பொழுது அத்தோற்றம் அகத்தில் படிமங்களாக பதிந்துவிடுகிறதை உணரலாம்என்றேனும் நாம் கடந்து வந்த நிலக்காட்சியை மீளசைவு செய்யும் பொழுது நினைவிலெழுவது அப்படிமங்களேயாகும்காடு நாவலில் கிரிதரன் இதை பல இடங்களில் அனுபவிப்பான் அவனுக்குள் கபிலர் பொங்கியெழும்போது கிரிதரனுடன் நானும் உச்சத்தை அடைவேன் (ஹரன் சில இடங்களில் கிரிதரனை நினைவிலிருந்து எழுப்பினான்).இந்த அகமும் புறமும் மோதும் கணங்கள் சாதாரண மனதில் வெறுமனே களியாட்டாகவும்நுண்ணுணர்வு மிக்கவனின் மனத்தில் ஆன்மிக அனுபவமாகவும் தங்கிவிடுகிறதுபுலன்களினால் இயற்கையை அகத்தினுள் நிறைத்துக்கொண்ட ஹரனின் விடுதலையை வாசிக்கையில் நெருங்கிச் செல்லவியன்றது.

துவக்கத்திலிருந்தே மைத்ரியின் ஒவ்வொரு அசைவும் மயக்கும்படியான சித்திரமாக விவரிக்கப்பட்டிருக்கிறதுவாசகனாக நானும் அவளை விரும்பத்துவங்கினேன்பின்னர் அவளுடன் ஹரன் நிகழ்த்தும் பயணம் ஒரு கட்வாலியின் பாடலைப்போல அகத்தில் இழைந்து சென்று என்னையும் கச்சர்கள் மீது அமரச்செய்திருந்ததுஜீது பஹட்வாலின் கதையை மைத்ரி விவரிக்குமிடத்திலேயே அது ஹரனின் பித்துப்பிடித்த இன்னொரு முகமெனவும் மைத்ரியே அந்த நீலவிழிகளுடையவள் என்றும் இணைத்துக்கொண்டேன்அதேபோல முடிவில் ஹரனும் அவ்வாறே அவளை நீலவிழிகளுடையவளாகக் காண்கிறான்மைத்ரியின் பிரிவிற்குப்பின் ஹரன் உணர்வதென்ன?? கேதார்நாத் சிகரத்தைப்பார்த்தபடி அவனுக்குள் எழும் உணர்ச்சிகள் பெருந்துயர்பேரெழில் என ஒவ்வொன்றும் உச்சமடைந்து இருளில் ஜோதியாக பனிமுடி ஒளிர்வதைப்பார்க்கிறான்அவனுடைய கதாரைசிஸ் (Catharisis) நிகழும் கணம் அதுவேஅவனுள்ளிருக்கும் அனைத்தும் வெடித்துச்சிதறுகின்றனஅவன் தன் உடலைக்கடந்து செல்லும் வெளியாக விரிகிறதுகேதார்நாத்தின் நீலச்சிகரம் இருளில் பிறையுடன் அமர்ந்திருக்கும் ஆதிசிவனின் இருப்பை பிரதிபலித்த தருணம் அனைத்தையும் கனவென அவன் உதறிச்செல்லவிழையும் பொழுதுஆயிரம் விண்மீகளைச்சூடிக்கொண்டு வெளியை நிறைத்தபடி அவள் புன்னகைப்பதைக் காண்கிறான்ஒவ்வொரு மூச்சும் நான் நான் என கணங்களை சுவாசிக்கத் துவங்குகையில்காதுகளில் ஓங்காரம் நிறைக்கையில்மைத்ரி என்றும் அகலாதபடி தன்னைச் சூழ்ந்திருப்பதை காண்பதுடன் நாவல் நிறைவடைகிறதுசுசித்ரா அவர்கள் குறிப்பிடும் காஷ்மீரி சைவம் குறித்த எந்த புரிதலும் அறிமுகமும் என்னிடம் இல்லைஆனால் தஸ்தவெய்ஸ்கி  “Beauty is mysterious as well as terrible. God and devil are fighting there, and the battlefield is the heart of man ” என்று கூறுவதுடன் பொருத்திப்பார்த்துக்கொண்டேன், ஆம் பேரழகானது உலகைக் காப்பாற்றக்கூடும்.

மைத்ரியை என் வாழ்நாள் முழுவது நினைத்திருப்பேன், இதற்கு முன் புத்துயிர்ப்பில் வரும் கத்யூஷாவின் சித்திரம் நெஹ்லூதவ்வை கடைத்தேற்றும் தரிசனமாக இருக்கும், அதனாலேயே கத்யூஷாவை என்றும் நான் விரும்பும் பெண்ணாக உருவகித்திருந்தேன். இங்கு மைத்ரியும் ஹரனை கடைத்தேற்றுவதற்காகவே தோன்றியதாய் எண்ணிக்கொள்கிறேன். மைத்ரி தங்களது ஒரே இலக்கிய முயற்சியாக இருக்கும் என எண்ணியதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள், எனினும் அதை மறுபரிசீலனை செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களது படைப்புகள் எதுவாயினும் திரைப்படமோ அல்லது தத்துவ நூலோ அனைத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தங்களது வாசகன் நான்.

நன்றிகள்,

சூர்யப்ரகாஷ் பிச்சுமணி

மதுரை.


அன்புள்ள சூர்ய ப்ரகாஷ்,

 தங்களது கடிதம் இந்த நாளை இனிமையாக்கிவிட்டது. அது என் நாவல் என்பதால் மட்டும் அல்ல. ஒரு கலை ஆக்கம் தரும் இயற்கையின், அழகின் தரிசனம் எவ்வளவு அறிதானது என்பதை அறிந்ததால் தான். நேற்று தான் டால்ஸ்டாயின் ”தெ கொசாக்ஸ்” என்ற சிறிய நாவலை படித்து முடித்தேன். பல வகையிலும் என் நாவலுக்கு மிகவும் நெறுக்கமானது அது, ஆகவே நானும் உங்கள் மனநிலையிலேயே உள்ளேன். மிக முக்கியமான ஆக்கம்.

மைத்ரியில் நீங்கள் அடைந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி, என் நாவல் டால்ஸ்டாயை நினைவூட்டும் என்றால் அது மிகுந்த பெருமையளிப்பது.

நீல விழிகளை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள் அது மாத்ரி மட்டும் அல்ல, கஸ்தூரி மிருக் உடையதாகவும் இருக்கலாம். உண்மையில் இந்நாவலில் எனக்கே பொருத்திக்கொள்ள முடியாத, என்னவென்று விளங்கிக்கொள்ள முடியாத இரண்டு அம்சங்கள் அவை. ஆனால் அவை கதையின் மையமும் கூட. இரண்டுமே தேவதாரு காட்டின் கனவுப்பரப்பில் நடக்கின்றன.

அதே போல நாவலின் கடைசியில் ஹரணை சூழ்வதும் என்ன என்பது வாசக மனதிற்கே விடப்பட்டுள்ளது. அந்த ’அவள்’ மைத்ரியோ, கௌரியோ, மாயையோ, பேரியற்கையோ எதுவாகவேனும் இருக்கலாம்.


கடிதத்திற்கு நன்றி

அஜிதன்


மைத்ரி குறித்து ஆ. முத்துலிங்கம்


இதுவே கவித்துவ உச்சம் என நினைத்தேன். ஆனால் அடுத்து வந்ததை படித்துவிட்டு புத்தகத்தை மூடிவைத்தேன். மேலே படிக்கத் தோன்றவில்லை. அவன் மலைப்பெண்னை  வாசனைகளின் வழியாக உணர்கிறான். அவள் நெற்றி பூமணம் வீசுகிறது. கன்னம் உப்பு மணம் வீசுகிறது. கழுத்தில் நெய் வாசனை; பாதத்தில் புல்வெளி மணம் இப்படியாக அவளுடைய ஒவ்வொரு அங்கத்தையும் ஒரு பெரிய வாசனையின்  கூட்டாக அவன் அகம் அள்ளிக்கொண்டே  போகிறது. உலகத்தில் எந்த ஒரு நாவலிலும்  இப்படியான ஒரு வர்ணனையை  நான்   கண்டது இல்லை; கேள்விப் பட்டதும் கிடையாது. அந்தப் பதைபதைப்பு ஆறு மட்டும் சிறிது நேரம் புத்தகத்தை மீண்டும் திறக்கவில்லை.


அன்புள்ள முத்துலிங்கம் சார்,

             இன்று ஒரு மறக்கமுடியாத நாள். தங்களின் வாழ்த்து செய்தியை காலையிலிருந்து பலமுறை படித்து விட்டேன். இந்த அளவுக்கு என் நாவல் உங்களை ஈர்த்தது என்பது எனக்கு பெரும் நெகிழ்ச்சியை அளித்தது. உங்களிடம் இதுவரை நான் பேசியதில்லை, கடிதம் அனுப்பியதில்லை. அதற்கு காரணம் ஒரு பயம் கலந்த தயக்கம் தான், கூடவே ஒரு மலைப்பு. உங்களை எப்படி அழைப்பது என்பதில் துவங்கி என்ன பேசுவது என்பது வரை. சிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு guardian angel போல நீங்கள் இருந்துள்ளீர்கள். கனடாவில் இருந்து அப்பாவின் பிறந்த நாளுக்கு நீங்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகள் எனக்கு எங்கோ வானத்தில் இருந்து வருபவை போல இருக்கும், அவற்றில் உங்கள் கையெழுத்து இப்போதும் நினைவிருக்கிறது. எங்கள் வீட்டில் இரவுணவு நேரத்தில் உங்களை குறித்த பேச்சு எழாத நாட்கள் குறைவு. அப்பா நீங்கள் பேசுவது போல பேசி காட்டுவார். 

உங்கள் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” “சிறுகதைகள்” இரண்டும் நான் வீட்டில் பாடபுத்தகத்துக்கு நடுவில் வைத்து கூட படிப்பது நினைவுக்கு வருகிறது. அதில் நான் படிக்கலாம் என்ற கதைகள் அம்மா பென்சிலில் அடையாளப்படுத்தி தருவார்கள். கராச்சி, சியாரா லியோன் என உலக வரைபடத்தில் உள்ள இடங்கள் மக்களும் பண்பாடுமாக எனக்கு அதில் அறிமுகமானது. எனது 8ஆம் வகுப்பில் நீங்கள் அனுப்பிய இந்திய பறவைகள் குறித்த புகைப்படங்கள் கொண்ட புத்தகம் தான் எனக்கு பறவைகள், இயற்கை மீதான ஆர்வத்திற்கு முதல் தூண்டுதல். அதை அணைத்தபடியே தான் எப்போதும் இருப்பேன். ஒருமுறை அது தொலைந்து போனது என்று நினைத்து 2 நாட்கள் சரியாக உண்ணாமல் கிடைப்பது வரை அழுதபடி இருந்தேன். அதன்பின் 10ஆம் வகுப்பு விடுமுறையில் நீஙகள் அளித்த ஜாரட் டையமண்டின் புத்தகம். அந்த புத்தகத்தில் என்னை ஈர்த்த விஷயம், ஒரு அலகை வைத்து ஒத்துமொத்த உலக இயக்கத்தையும் விளக்க முயல்வது. பின்னர் தான் அது இயல்பாக எனக்குள் இருந்த தத்துவம் மீதான ஆர்வம் என புரிந்தது. அவ்வகையில் என் வளர்ப்பில் உங்கள் பங்கு முக்கியமானது.

இந்த நாவலில் வரும் மக்கள், பண்பாடு, இயற்கை, தத்துவம் எல்லாவற்றுக்கும் நான் உங்களுக்கு கடன் பட்டுள்ளேன்.

முன்னுரையில் நான் குறிப்பிட்டிருந்தது நாவல் எழுதும்போது இருந்த மனநிலை. இப்போது நிச்சயம் ஒன்றிரண்டு நாவல்களாவது எழுத வேண்டும் என தோன்றுகிறது. அது போக தத்துவம் மற்றும் கலை சார்ந்தும் எழுதும் எண்ணம் உள்ளது.


இப்படிக்கு அன்புடன்

அஜி


மைத்ரி வாசிப்பனுபவம் - விஷ்ணு குமார்


அஜிதன்,

மைத்ரி நாவல் வாசித்தேன். உங்களின் தத்துவ கல்வி பின்புலமே என்னை முதலில் இந்த நாவலை நோக்கி ஈர்த்தது ஆகையால் கின்டிலில்   வெளியானதும் வாசித்தேன். ஆனால் இதில் புலன் அனுபவங்களால் மட்டுமே ஏற்படும் ஒரு ஆன்மீக தரிசனம் உண்டு என முன்னுரையில் கூறியது போல் தத்துவத்தின் கடுமையான எடையின்றி இருந்தது. இது இந்த நாவலின் என்னுடைய ஒரு ரசனை விமர்சனம் .

 இமய மலையை மையப்படுத்தி நிறைய கதைகள் உண்டென்றாலும் கோவேறு கழுதை பயணம் வழியாக அந்த நிலத்தை சுற்றிவருவது ஒரு புதுமையான அனுபவம். அந்த பயணத்திலேயே அந்த பகுதியின் மக்கள், கலாச்சாரம், இயற்கை, விலங்கு,பறவை, தொன்மம் என எல்லாமே ஒரு கனவில் வாழ்ந்த அனுபவத்தை தருகிறது.ஹரன் ஒரு  தேடலுள்ள இளைஞன் இளமைக்கே உரிய சாகச உணர்வும் தன் மீதே  கசப்பும் ஒவ்வாமையும் கொண்டவன். ஹரனின் அகச் சிக்கல்களாக நிறைந்திருப்பது பாதுகாப்பின்மையும், நம்பிக்கையின்மையும். சிறு வயதிலேயே தாயை பிரிந்த ஏக்கம் அவனிடம் சூழ்ந்துவிட்டது அதுவும் முற்றிலும் எதிர்பார்ப்பில்லாத துய அன்பை மட்டுமே வெளிப்படுத்திய தாய். ஒருவேளை அந்த இழப்பே அவனுடைய அகச்சிக்கல்களின் மையமாக இருக்கலாம். 

அதே அன்பையும் அரவணைப்பையும் அவன் தேடுகிறான் அப்படிக்  கிடைக்கும் அன்பையும் அவன் ஐயப்படுகிறான்,அவர்களை உதாசீனப்படுத்துகிறான் பின் தன்னிரக்கம் கொள்கிறான். இந்த தத்தளிப்பு எல்லாவற்றையும் ஒரு ஆன்மீகமான தத்தளிப்பு என்றும் சொல்லலாம்( longing for eternity). கௌரியிடம் தனக்கிருக்கும் உறவை ஹரன் வெளிப்படுத்துகையில் ஒருவாறு அவன் உளநிலையை ஊகிக்கலாம். இயல்பாக இந்த மனநிலை நம்மை ஒரு கனவு நிலத்தை நோக்கி கொண்டு செல்லும், மனம் அங்கே அற்புதம் நிகழும் என எண்ணக்கூடும். அதுபோலவே அவனது உத்தர்காண்ட் பயணம் ஒரு அருமையான கனவாகவும் பின் தத்தளிப்பாகவும் ஒரு தரிசனமாகவும் மாறுகிறது. மைத்ரி உண்மையில் அந்த மலையேதான் அவளுடனான உறவு அந்த மலையுடனான இயற்கையுடனான உறவுதான். 

மைத்ரி தூய அன்பின் முகமாக கொடுப்பதற்கு மட்டுமே வந்தவளாக அல்லது மாயையின் அழகிய தரிசனமாக வருகிறாள்.அந்த மாயையின் அரவணைப்பில் இன்பம் கண்ட ஹரன் அதன் விலக்கத்தை பிரிவை ஏற்கமுடியமல் தவிக்கிறான். உண்மையில் அவனுடைய ஆன்மீக தத்தளிப்பு இங்கே தீவிரமாகிறது மலைமேல் ஏறி உயிர்விடச் செல்லும் அவனுக்கு ஒரு தரிசனமாக அமைகிறது அங்கே ஏற்படும் அனுபவம். முற்றும் இருண்டுவிட்ட உச்சி மலையில் மாபெரும் தீபம் போன்ற சிகரத்தின் ஒளி. இதுவரை அவனை ஆட்கொண்ட சுயம் மறையும் தருணம். ஆன்மீகத்தில் separate self என்று சொல்வார்கள். இந்த சுயம் உண்மையில் விலகும் நேரம் தான் மாயை விலகும் நேரம், அங்கே அவன் அவன் விரிவை காண்கிறான். ஓநாய் தன் உடலை கிழித்து எல்லா திசைகளிலும் அவன் பரவுகிறான் எல்லா திசைகளிலும் அவனை சுவைக்கிறான் ( இங்கே எனக்கு அந்த லல்லேஸ்வரி கவிதை நினைவுக்கு வந்தது). அந்த உயர் அனுபவத்திலிருந்து அவன் யதார்த்தத்துக்கு வருகிறான். அவன் வீசியெறிந்த ஜாக்கெட் பறந்து போகாமல் செடியில் மாட்டி கொண்டது அதை காட்டுகிறது. கீழே வெந்நீர் கிணற்றில் உறைந்த அவன் மனம் உருகி ஒரு ஆன்மீக விழிப்பை அடைகிறது. கௌரி நிலம்/ உண்மை என்றால் மைத்ரி உயரம்/ மாயை.

நிலத்திலிருந்து உயரம் சென்று மீண்டும் நிலத்திற்கு திரும்புதல். கனவும் யதார்த்தமும் முட்டிகொள்ளும் ஒரு படைப்பு . எளிமையான நடையில் அதே சமயம் தீவிர அனுபவத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.

நன்றி,
விஷ்ணு குமார்.

அன்புள்ள விஷ்ணு குமார்,

      விரிவான வாசிப்பனுப பகிர்வுக்கு நன்றி. தங்கள் வாசிப்பில் மூன்றாம் பாகத்தின் அதிலும் கடைசி அத்தியாயத்தின் பொருள் குறித்து முக்கியமாக பேசியிருக்கிறீர்கள். அப்பகுதி எனக்கும் ஒரு பேரனுபவமாகவே எழுந்தது. குளிருறைவின் உச்சத்தில் உலகில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு வினோதமான நிகழ்வு உடைகளைதல் என்பது (paradoxical undressing). எழுதும்போது மிக இயல்பாக அது வந்தது. விஞ்ஞானத்தால் முற்றிலும் விளக்கமுடியாத ஒரு விஷயம் இது. ஆனால் எனக்கு அதில் ஒரு பொருண்மை கடந்த உண்மை இருப்பதாக பட்டது. தகிப்பென மாறும் உறைவு.

நன்றி

அஜிதன்    

வாசிப்பனுபவம்- கோபால் 


அன்புள்ள அஜிதன்,

மைத்ரி நாவலை வாசித்து முடித்தேன். சமீபத்தில் ஜெவின் வலைதளத்தில், கடலூர் சீனு ஷெளக்கத்தின் பயண நூலான இமாலயத்தைப் பரிந்துரைத்திருந்தார். நேரடியாக இல்லாவிட்டாலும் பிரம்மாண்டமான பனிமலை, வற்றாத சாம்பல் நீல மந்தாகினி நதி, ஊசி வளைவுகள் , தேவதாரு மரங்கள் , பனிப் பாறைகள் , ஓநாய்கள், கழுதைகளின் மீது பயணம், கூச்செறியும் குளிர் இப்படி மைத்ரியின் கதைக் களங்களைகளை இமாலயத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது.

தாயை இழந்த ஹரன் தன்னுடைய அகத் தேடலுக்காக பயணம் மேற்கொள்கிறான்.பயணத்தில் தற்செயலாக இளம் பெண் மைத்ரியை சந்திக்கிறான் . அவளுடன் அவளுடைய சொந்த கிராமத்திற்கு சென்று வீடு மற்றும் உறவினர்களை சந்திக்கிறான் . அவளுடனான பயணத்தில் விரிவான அனுபவங்களை அடைகிறான் .

மைத்ரி என்றாலே ஒருமுகம் ஆனவள். மைத்ரியின் கதாபாத்திரம் அவளை மனதால் முதிர்ந்த அன்னையாக, உள்ளூர் தொல்குடிகளின் வரலாறு சொல்லும் ஆசிரியையாக, வரும் வழியில் கடக்கும் புதிய இடங்களுக்கு அவற்றின் கர்ண பரம்பரை வரலாறு சொல்லும் வழிகாட்டியாக, கழுதைகளைப் பயணத்தில் கையாளும் சாரதியாக , ஹரனின் தேடலுக்கு விடையாக இருக்கிறாள். 

ஹரன் தேடுவதுஎன்ன?தனக்கான துணையா? இறந்த அன்னையா ? இரண்டும் ஒன்றை ஒன்று நிரப்பிக் கொள்ள முடியுமா?

ஹரனின் தேடலுக்கான விடையை தருக்க சிந்தனைகளால் மெய்ப்பிக்க விழையாமல் புறவழிப் பயண அனுபவங்களால் வாசகனின் ஊகத்திற்கு விட்டிருப்பது சுவாரஸ்யமான உத்தி.

நாவலின் மொழிநடை எந்தத் தாக்கத்திலும் சிறை படாமல் வாசிப்பவர்களின் ஆழுள்ளத்தை நோக்கி பேசும் மொழியாக இருந்தது .

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கோபால் 


புனே

வாசிப்பனுபவம் - பாரதி சண்முகம்



இந்த நாவல் இமையத்தை கண்முன் விரித்து காட்டுகிறது. பேருந்து பயணம், உடன் வரும் மந்தாகினியின் நடனம், புதுப்பயனியை வரவேற்கும் டீ கடை கண்கள், வாலை குழைத்து வந்து பாவுபன்னை உண்ட நாய், ஜீப் ஸ்டாண்ட், பட்டாளத்தாரின் முரட்டுபாவனை, கௌரிகுந்த் விடுதி, அறையின் ஜன்னல், கோவேரி கழுதை, அதற்கு லாடம் கட்டும் காட்சி, மைத்ரி கொண்டு வரும் கோதுமை அப்பத்தின் நெய் மணமும், வெல்லத்தின் ருசியும்.

பாரம்பரிய உடையணிந்த பெண்களும், ஆண்களும் நிறைந்து இருந்த கோவில், அதில் இசைக்கும் இசை, அதன்பின் புல்வெளி, தேவதாரு மரங்கள் நிறைந்த காடு, அதன் அமைதி, கைவிடப்பட்ட கிராமம்.

பூக்கொண்டு ஆசிபெரும் சிறுமிகள், அங்கு சுவைத்த விருந்து, திரும்புகையில் சற்றே அருளிய வருண பகவான், பயணத்தினால் கொண்ட உடல்ச்சோர்வு, கணிவுடன் உதவிய விடுதி பெரியவர், இவற்றினுள் மெல்லிய காதலும் பெற்றது இந்நாவல். (மாபெரும் இயற்கையின் தரிசனம்)


மைத்ரி நாவல் அனுபவம் பென்சில் ஓவியங்களாக

மகேஷ்வரி, நியூ ஜெர்சி

நாவல் வாசித்தல்

வரிகள்!


தேவதாரு காட்டில் சிக்கியும் சோனியாவும்



மைத்ரியின் நிலக்காட்சி

வாசிப்பனுபவம் - விசுவநாதன்

 

மைத்ரி நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். இங்கு இரவு மணி மூன்று.  

 மாத்ரி-ஜீது (சக்தி-சிவன்) தொன்மத்தின் நவீன வடிவமான மைத்ரி-ஹரன், கற்பனாவாதமும் யதார்த்தமும் கலப்பது என மைத்ரி எனக்கு மிக பிடித்திருந்தது. அஜிதனுக்கு அன்பும் வாழ்த்துக்களும். முதல் நாவல் என்ற ஆச்சரியம் விலகவில்லை. கூடவே இதுவே கடைசி நாவல் என்று அவர் சொல்வது வருத்தத்தையும் தருகிறது. 

எனக்கு காஷ்மீர சைவம் மற்றும் தத்துவங்கள் குறித்த பரிச்சயம் இல்லை. சுசித்ராவின் சிறந்த முன்னுரையை ஒரு கையேடாக கொண்டு மீள்வாசிப்பு செய்தால் அந்த தளங்கள் பின்பு திறக்கலாம். ஆனால், நாவலின் காதல் கதைக்காகவும், கற்பனாவாத நில காட்சிக்காகவும், கொட்டிக்கிடக்கும் உவமைகளுக்காகவுமே எனக்கு பிடித்திருந்தது. உதா: மரங்களே அற்ற சரளை கற்களால் ஆன மலைச்சரிவை "தோலுரிக்கப்பட்ட விலங்கு" என்கிறார்; கரிய வானில் பதிந்த கூர்நகத்தடமாக பிறைநிலவு வருகிறது.

 காடு நாவலின் கூட்டுவாசிப்பு தந்த பரவசத்தில் அதைப்போன்று ஒரு நாவல் எழுதிப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன் என முன்னுரையில் சொல்கிறார் அஜிதன். காடு நாவலில் காமம் அதன் அத்தனை வடிவங்களிலும் வரும்; நிறைய கதைமாந்தர்கள்; நாவலின் கதை நிகழும் காலம் - கதாநாயகன் கிரியின் மொத்த வாழ்நாள். மைத்ரியில் கதையின் காலம் இரண்டே நாட்கள். மிகக்குறைந்த கதை மாந்தர்கள். காடு நாவலில் உச்சமாக வரும் குறிஞ்சி பூக்கும் மலைச்சரிவில் தேன் உண்ணும் வண்டுகளின் வாழ்க்கையை (நீலி-கிரி) மட்டுமே எடுத்து, விரித்து சொல்வது போல கதைக்களம். 

காடு நாவலின் மையமே "முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்லின் பெருவிருந்தே காமம்" என்ற சங்கபாடல் தான். காமம் என்ற தீராத விருந்தை சுவைத்து பருகிய சங்ககாலத்து கண்ணதாசனின் தரிசனம் அது.

மைத்ரியின் தரிசனம் அந்த தீராத விருந்தை சுவைத்துப் பருகி, பின்பு ஆழத்து இருளுடன் மல்லிட்டுதிசையெங்கும் கிழித்து எறிந்த மெய்ஞானியுடையது. 

காஷ்மீர சைவ மெய்ஞானி லல்லேஷ்வரியின் வரிகளுடன் நாவல் துவங்குகிறது.  இந்த மூன்று வரிகளும்தான் நாவலின் மூன்று பகுதிகள். 


ஒரு கணம் கூட அதை ஏற்கவில்லை

நான் என் சுயத்தின் மதுவை

  கண்மூடி பருகினேன்.

பின் என் ஆழத்து இருளுடன் 

   மல்லிட்டேன் 

அதை வீழ்த்தி நகங்களால்

திசையெங்கும் கிழித்தெறிந்தேன்.

                        - லல்லேஷ்வரி 

 

அன்புடன்,

விசு

வால்நட் கிரீக், கலிஃபோர்னியா

 

அன்புள்ள விசு,

 

 உங்கள் கடிதம் கண்டதில் மகிழ்ச்சி. ஆம். காடு நாவலின் பரப்பு பெரியது. அதனால்தான் அதோடு இதற்குள்ள தொடர்பின் அளவிற்கே வேற்றுமையும் கவனத்திற்கு உரியது. காடு நாவலின் இளம் கிரிதரன் காதலின் முதல் தித்திப்பை உணர்பவன், ஹரன் அப்படியல்ல. அதேபோல நீலி தூய மலைப்பெண், மைத்ரி தன் ஊரை விட்டு முன்னரே அகன்று விட்டவள். அவர்கள் இருவரும் சேர்ந்தே அந்த கனவுக்குள் செல்கிறார்கள், கலைந்துவிடும் என உள்ளூர தெரிந்தே அதில் லயிக்கிறார்கள். அவர்கள் இருவரிடமும் இழந்த ஒன்றை மீட்டெடுக்கும் ஏக்கம் நிறைந்துள்ளது. ஒரு வகையில் இது ஷில்லர் சொல்லும் naive poetry/sentimental poetry இடையிலான வேறுபாடு தான்.      

 அதேபோல தத்துவார்த்தமான வாசிப்பு குறித்து சொல்லியிருந்தீர்கள். என்னை பொறுத்தவரை ஒரு இலக்கிய படைப்புக்கு ஒரு வாசிப்பே முதலும் கடைசியுமானதாகும், அது கலாபூர்வமான வாசிப்பு. அதில் உணர்வு பூர்வமாக அணுகுவது மிக முக்கியமானது. ஒரு ஆசிரியனாக எனக்கு உணர்வுபூர்வமான வாசிப்பே நிறைவளிக்கிறது, அது மட்டுமே போதும் என சில சமயம் தோன்றுகிறது. அறிவுபூர்வமான நுட்பங்கள் மேலதிகமான கவனம் கொள்வது மகிழ்வே. ஆனால் அது மட்டும் அடையபெரும்போது அது ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது.

 ஒரு படைப்பின் கலா அனுபவத்தை வரையறுத்து கொள்வதற்கும், அதை மேற்கொண்டு சிந்தனையில் வளர்ப்பதற்கும், அதை பிறரிடம் கடத்துவதற்குமே தத்துவ கருவிகள் உதவுகின்றன. இது எதுவுமே கலையை நேரடியாக சார்ந்ததில்லை என்று கவனிக்க.  காஷ்மீர சைவம் இந்நூலில் எடுத்தாளப்படவில்லை, ஆனால் அதன் உணர்வுநிலை இந்நாவலில் இயல்பாக கைகூடியிருக்கிறது, அது அந்நிலத்திலிருந்து வருவது. அதையே தான் சுசித்ராவும் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்ததும் முதன்மையாக ஒரு உணர்வுபூர்வமான வாசிப்பு தான், அதன் பின் அறிவு பூர்வமாக அந்த அனுபவத்தை இலக்கிய வகைமைகளுள் வரையறுக்கிறார், கடைசியாக தத்துவார்த்தமாக அந்த அனுபவத்தை சில மரபுகளுடன் இணைத்து சிந்தனையில் வளர்க்கிறார். அது அவரது தனிப்பட்ட தேடல் சார்ந்தது. அதற்கான விதை நாவல் தரும் அனுபவத்தில் உள்ளது என அவர் குறிப்பிடுகிறார். நாவல் வாசிப்புக்கு அந்த பிரிதொன்றிலாத அனுபவமே போதுமானது.

அன்புடன்

அஜிதன்

இனியதொரு இமயமலைப் பயணம் 

(மைத்ரி - வாசிப்பனுபவம்) 


ஊரெங்கும் இப்பொழுது இயக்குனர் மணி ரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30-ல் வெளிவருகிறது என்றுதான் பேச்சு. அந்தப் பொன்னியின் செல்வன் படத்தில், உதவி இயக்குனராக பணிபுரிந்த அஜிதன் , மைத்ரி எனும் நாவலை எழுதியுள்ளார். அதை கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட , மைத்ரி, ஜூன் முதல் வாரம் முதல் அமேசான் கிண்டிலில், காசு போட்டு வாங்கினால், வாசிக்க கிடைக்கிறது.

கதைசொல்லி ஹரன், ருத்ரப்ராய்கிலிருந்து , சோன்ப்ரயாக் செல்லும் பஸ், குந்த் என்னும் சிற்றூரில் நிற்கிறது. அங்கு வந்து , ‘பையா , பஸ்ஸில் எனக்கு ஒரு சீட் போடு’ என்று கைக்குட்டை கொடுக்கும் பெண்ணுடன் பயணம் தொடர்கிறது. அவர்களுடன் இடம், வலம் என்று மாறி மாறி மந்தாகினியும் பயணம் செய்கிறது. யார் வந்தால் என்ன போனால் என்ன மந்தாகினியின் பயணம் மாறப்போவதில்லை. ஆனால், இளைமைத்துள்ளலுடன் இருக்கும் ஹரனுக்கு பயணம் மாறுகிறது, ருத்ரப்ரயாகில், அலகானந்தாவும் மந்தாகினியும் கூடுவதைப் பார்த்ததும், மந்தாகினையைத் தொடர்ந்து சென்று கேதார்நாத் பார்க்கலாம் என நினைக்கிறான் கதைசொல்லி ஹரன். இல்லை மலை இடுக்குகளில் ஒளிந்து கொள்ள நினைக்கிறான். அவன் புறப்பயணத்தையும் அகப்பயணத்தையும் மாற்றப்போவது குந்த் நகரில் அறிமுகமாகும் இந்த இளம் பெண் மைத்ரி. 

சட்டென்று ஹரனுடனும் மைத்ரியுடனும், உடன் தொடர்ந்துவரும், மந்தாகினியுடனும் சிறு பயண அனுவம் கொடுக்கும் நாவல் எனத் தோன்றும். கிடைப்பது என்னவோ காட்வாலி இன மக்களுடன் வாழ்ந்துவிட்ட அனுபவம். உத்தரகாண்ட் மாநிலத்தில் வாழும் அந்த மக்களை, அறிந்துகொள்வது, அவர்களின் இசையை கேட்பது, கொள்ளுக்கூட்டை செய்நேர்த்தியுடன் செய்வது, கோவேறு கழுதைகளின் கால்களில் லாடம் அடிப்பது, என மூன்று நாள் பயணத்தில் இமயமலை உச்சியில் உள்ள கிராமம் ஒன்றில், சிறு நகரம் ஒன்றில் காலம் காலமாக இருந்த அனுபவம். 

ஹரனும் மைத்ரியும், மற்ற கதா பாத்திரங்களும் கற்பனை என்று வைத்துக்கொண்டாலும், ருத்ரப்ரயாக், சோன்ப்ரயாக், கௌரிகுந்த், கேதார்நாத், மந்தாகினி, எல்லாம் வரைபடத்தில் உள்ளதுபோல தெள்ளத்தெளிவாக அஜிதனின் எழுத்து வடிவத்தில், நிஜத்தில் உள்ளபடி இருக்கிறது.. சோன் கங்கா ஆறு மந்தாகினியுடன் இணையும் இடம், மைத்ரியின் கிராமத்திற்கு செல்ல எவ்வளவு நேரம் எடுத்தது, மொத்தமாக அன்றைய பயணத்தில் எவ்வளவு தூரம் கோவேறுக் கழுதையில் பயணம் செய்தார்கள் போன்ற நுணுக்கங்களுடன் சொல்லப்படுவதால், நாவலில் இருந்து குறிப்பு எடுத்துக்கொண்டு கேதார்நாத் போய்வந்துவிடலாம். பயணம் முடித்து , திரும்புகையில், த்ரிஜுகி நாராயண் கோவிலுக்குப் போகாமல் வந்துவிட்டோமே என்று நாவல் தொட்ட எல்லா இடத்திற்கும் போகமுடியாமல் ஒரு ஏக்கத்துடன் வரவும் வாய்ப்பிருக்கிறது. 

கதைசொல்லி ஹரன், நிஜத்தில் நாம் இன்று பார்க்கும் ட்ரென்டியான இளைஞர்களைப் போல தாடி வைத்திருக்கிறான். தனக்குத் தெரியாத கட்வாலி மொழியில் பாடல் கேட்டாலும், இசையை மட்டும் வைத்து குழந்தை மண்டியிட்டு தவழ்வதையும், எச்சில் வழிய சிரிப்பதையும் ரசிக்கிறான். தன்னைவிட மைத்ரி சக்கரில் சர்வ சாதாரணமாக சவாரி செய்கிறாள் என்று ஆணவம் இல்லாமல் ஒத்துக்கொள்கிறான். மலையில் செங்குத்தாக ஏறுகையில், இவளுக்கு மட்டும் எப்படி மூச்சு வாங்காமல் இருக்கிறது என்று வியக்கிறான். இறந்துபோன அம்மா, பழைய காதலியைப் பற்றிய நினைவு என அவனை அறியும்பொழுது தெரிந்தவனாக, அணுக்கமானவனாக ஆகிவிடுகிறான். 

மைத்ரி நாவலில், ஹரன், புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும், அவன் அம்மாவை கடைசியாக பார்த்த தினம், அம்மாவின் கால்களை அவன் ஆழ்ந்து பார்ப்பது என்பது, அப்படியே என் வாழ்க்கையில் நடந்தது. எழுத்தாளன் என்பவன் பிறிதொருவராக வாழ முடிபவன். அஜிதன், ஹரனாக, நானாக வாழ்ந்திருக்கிறார்.

நாவலில் வந்த பாத்திரங்கள் எல்லாரையும் என்னால் வகையிட்டுச் சொல்லமுடியுமா என்று பார்க்கிறேன். மைத்ரியின் அழகை ஹரனின் பார்வையில் சொல்லமுடியும்.  ரிது பெரியம்மாவிடம், ஹரன்தான் வெற்றிலை வாங்கிவந்தான் என்று மைத்ரி சொன்னதன் ரகசியம் தெரியும். பால்கங்கா விடுதி, சில வருடங்களுக்கு முன்னால் வந்த வெள்ளத்தில் ஏன் அடித்துச் செல்லப்படவில்லை என்று அந்த விடுதி முதியவரின் நம்பிக்கை நினைவில் இருக்கிறது. ஹரன், மைத்ரியுடன் சக்கரில் பயணம் புறப்பட கொஞ்சதூரம் சேனைகளை பிடித்து வந்த அந்த அழுக்குவேஷ்டி அண்ணாவையும் தெரிகிறது.

பாத்திரங்களுக்கு இணையாக, அலகானந்தாவும், மந்தாகினியும் இணையும் இடத்தில் சகோதரிகளென சலசலப்பதும், சோனியா, ஆரம்பத்தில் ஹரனுடன் ஒட்டாமல் இருப்பதும், முடிவில் அவன் கன்னங்களை நக்குவதும் கூட நினைவில் இருக்கிறது. எழுத்தாளர் அஜிதனுக்கு , இது முதல் நாவல். வாசித்துவிட்டு எழுதிப்பார்க்கையில், என்னிடம் அவர் விட்டுச்சென்றதை யோசித்துப் பார்த்தால், தேர்ந்த எழுத்தாளன். அவரது அடுத்த நாவலுக்கு காத்திருக்கலாம்.

1987-ல் ஒரு நேர்முகத்தில் பங்குகொள்வதற்காக டேராடூன் சென்றேன். 1992-ல் நண்பர்களின் வற்புரத்துதலின்பேரில்தான், ஹரித்வார், ரிஷிகேஷ் சென்றேன் என்று சொல்லலாம். கங்கையில் சில அடிகளே நீச்சலடித்து நிம்மதியடைந்தேன். அந்தப் பயணங்களில் மழை வருவதை அறிந்து நடனமிடும், மோனலை பார்க்கவில்லை. ரோட் சாப்பிடவில்லை. ஒரு சரிவில் வெண்பூக்கள், மற்றோரு சரிவில் மணி நீல நிறத்தில் பூக்கள், உச்சிகளில் மஞ்சள், சிவப்பு பூக்கள் என புற்களால் வரைந்த வானவில்லைப் பார்க்கவில்லை.   முன்னர் நான் பார்த்த இமயமலையைவிட, அஜிதனின் வர்ணனையில் மைத்ரி நாவலில் கண்டுணர்ந்த இமயமலையையும், நதிகளையும், பறவைகளையும், விலங்குகளையும் பேரனுபவமாக கருதுகிறேன்.   

படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்த அனுபவம், வாசித்து ,பயணம் செய்து, வீட்டிலேயே தந்தையும் குருவுமாக அவரிடமே கற்றுக்கொண்டிருக்கலாம் என நினைக்கவைக்கும் எழுத்து என்று அஜிதனுக்குள் கலையைப் படைக்கும் கலைஞனின் நுணுக்கங்கள் இருக்கின்றன. நாவலில் வரும், முந்தைய எந்த ஒரு சின்ன நிகழ்வுக்கும், பின்னர் வரும் ஒரு நிகழ்வுக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது. கங்கீ பயணத்திற்கு முன், ஹரன் ரோட் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் மீதம் வைக்கிறான். பின்னர், தேவதாரு காட்டில், மைத்ரி , அந்த மிச்ச ரொட்டியை எந்தப் பக்கத்தை விரும்பி சாப்பிடுகிறாள் என்பதில் இருக்கிறது தொடர்ச்சி, மற்றும் அவர்களுக்குள் மலர்ந்திருக்கும் காதல். காதலை மென்மையாக சொல்லும் கலைஞன், காமம் எழுந்தாடும் இடங்களையும் சொல்வதற்குத் தயக்கமும் கூச்சமும் கொள்ளவில்லை. பெரும் பயணத்திற்குப்பின் கால்வலியில் துடிக்கும் ஹரனில் தத்துவ ஆசிரியனும் வெளிப்படுகிறான். // வலியில் சென்று மோதும் கணமே உண்மையான பொருளுலகை எதிர்கொள்கிறோம். ஆணவம் முற்றழிந்து இயலாமையில் கரைந்து மறைகிறோம். வலி. பசி. நோய். முதுமை இறப்பு. //

கொலராடோ மாநிலத்தில் பைக் பீக்ஸ் என்று ஒரு சிகரம் 14,115 அடி உயரத்தில் உள்ளது. அங்கு நான் சென்றடைந்தபொழுது , ‘பெருமாளே பெருமாளே’ என்று பதினைந்து நிமிடம் அழுதேன் என்று சொன்னால், நீங்கள் அதைப் புரிந்துகொள்கிறீர்கள். சாக்ரெமெண்டோ ஆறு ஊற்றாகப் பிறக்குமிடத்தை பார்க்கச் சென்றேன் என்று நான் சொன்னால், நீங்களும் நதி பிறக்குமிடத்தை பார்தத்தை அல்லது நதி சென்று கடலில் சங்கமிப்பதை பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். டெக்ஸாஸ் மாநிலத்தில், ஆஸ்டினிலிருந்து டாலஸிற்கு வடக்கு முகமாக செல்லும் வழியில் நூறு மைல் தொலைவில் வேகோ எனும் நகரம் உள்ளது. அந்த நகரத்தில் உள்ள பெய்லர் பல்கலைக்கழகத்தை தாண்டியதும் மேற்குமுகமாக மூன்று மைல் சென்றால், ப்ராசோஸ் கிழக்கு  பூங்காவை அடையலாம். அந்தப் பூங்காவின் ஒரு பகுதியில்,பாஸ்க் எனும் நதியும், ப்ராசோஸ் எனும் நதியும் மைத்ரியின் கதைசொல்லி சொல்வதைப்போல இரு சகோதரிகள் சந்தித்துப் பேசிகொள்வதைப் பார்க்கலாம் என்கிறேன். நீங்களும் அப்படியா என்று கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் இந்த நாவலை நீங்கள் வாசிக்கலாம். படித்து முடிக்கும் வரை நீங்கள் கீழே வைக்கமாட்டீர்கள். எங்கள் வீட்டில் அப்படித்தான், நான் என் மனைவி, மகளென மூன்று பேரும் வாசித்தோம்.


- வ.சௌந்தரராஜன் 

07/13/2022

மைத்ரி- லோகமாதேவி கடிதம்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்


அஜிதனை நான் முதலில் பார்த்தது   பல வருடங்களுக்கு முன்னர் ஊட்டி காவிய முகாமில், அப்போதுதான் அருண் மொழியை முதலில் பார்த்ததும்.


நானும், அடர் நீலச் சதுரங்கள் கொண்ட வெண் பருத்தி புடவையில் அருண்மொழியும் குருகுலத்தின் உணவுக் கூடத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு மண் மேட்டில் அமர்ந்திருந்தோம், உணவுக் கூடத்திலிருந்து நண்பர்களுடன் மேலேறி வந்து கொண்டிருந்த நீங்கள் அருணாவின் முதுதில் ஒரு தட்டு தட்டி ’வா நேரமாச்சு’ என்றபடியே கடந்து சென்றீர்கள். அடி கொஞ்சம் பலமாக விழுந்துவிட்டது. அருணா ’இதை பிடிங்க’ என்று என்னிடம்  கைப்பையை  கொடுத்துவிட்டு எழுந்து, உங்களை தொடர்ந்து வந்து பலமாக ஒரு அடி முதுகில் வைத்து ’எதுக்கு ஜெயன் அடிச்சே’? என்றார்கள் . நீங்கள் திரும்பி’ ’இல்லடி செஷனுக்கு நேரமாச்சு அதான்’ என்றதும் ’அதுக்கு? அடிப்பியா? வலிக்குது தெரியுமா? என்று  சொல்லிக் கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையில் எங்கிருந்தோ அஜிதன் வந்து நின்றான்.  (வெண்முரசில் இதுபோலவே பீமனும் இடும்பியும் பேசிக்கொண்டிருக்கையில் கடோத்கஜன் இருவருக்கும் இடையில் வந்து நிற்பான்). பின்னர் விஷ்ணுபுரம் விழாக்களில் சில சமயம் அஜிதனை பார்த்திருக்கிறேன்


அஜிதன் எடுத்த குறும்படத்தை பார்த்தபோது அந்த அஜிதனா என்று பிரமிப்பாக இருந்தது.  சென்ற மாதம் ஒரு கூடுகையில் தத்துவ விளக்கங்கள் குறித்து உரையாற்றிய அஜிதன் அதுவரை நான் பார்த்திருந்த., நான் கொஞ்சமாக வேணும் அறிந்திருந்த அஜிதனே இல்லை


அஜிதன் அன்று பேசியவை அனைத்தும் மிகப்பெரிய விஷயங்கள் என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது. அவற்றை பேசுகையில் அஜிதனின் உடல்மொழியும் ஆச்சர்ய மூட்டியது மிக மிக சாதாரணமாக, எளிய அன்றாட நிகழ்வுகளை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல தான் அத்தனை தீவிரமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்


இளைஞர்கள் முக்கியமான, தீவிரமான விஷயங்களை பேசிக் கேட்கையில் நான் பிறரைக் காட்டிலும் மிக அதிகம் மகிழ்ச்சியடைவேன் ஏனெனில் ஏழாயிரம் இளைஞர்கள் படிக்கும் கல்லூரியில் பல வருடங்களாக பணியிலிருக்கிறென். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டு கொஞ்சம் அதிகப்படியான அறிவுடன் இருப்பவர்கள் என்றுகூட விரல்விட்டு எண்ணிச் சொல்லக் கூடிய அளவில்தான் சிலர் இருக்கிறார்கள்  எனவே அஜிதனை போன்ற அரிதினும் அரிய இளைஞர்கள் எனக்களிக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளப்பரியது


ஆனால் மைத்ரியில் கண்ட அஜிதன் முற்றிலும் வேறு. ஹரனின் பேருந்து பயணத்தின் தொடக்கத்திலேயே  அஜிதன் என்னும் அரிய  படைப்பாளியை கண்டுகொள்ள முடிந்தது.  ஹரனின் பயணம் வாசிப்பவர்களின் பயணமும் ஆகிவிடுகிறது.

உடல் சூட்டை இருக்கைக்கு அளித்து அதை வாழ்விடமாக்க வேண்டும் என்னும் வரியில் இது நான் முன்பு அறிந்திருந்த அஜிதனல்ல என்று மீண்டும் எனக்கே சொல்லிக்கொண்டேன் 


மிக புதிய நிலப்பரப்பில் நாவல் விரிவதால் அக்கதையுடன் இன்னும் அணுக்கமாகி கதையையும் நிலப்பரப்பையும் சேர்ந்தே  ரசிக்கவும் முடிந்தது அது  மேலும் சுவாரஸ்யம் ஆக்கிவிடுகிறது வாசிப்பனுபவத்தை


முழுவதும் வாசித்து முடித்த பின்னர் சில நாட்கள்தான் அந்த பயணமும் அக்கதை நிகழ்வதும் என்பதை நம்ப முடியவில்லை.பல நூறு வருடங்களுக்கான பயணம் அது. கதையை முழுக்க சொல்லி இன்னும் வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்பத்தை குலைக்கவிரும்பவில்லை


ஹரனை பசுமைப் பெருக்கும் பெண்மைப்பெருக்கும் தொடர்ந்து சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. கெளரியும், அன்னையும், ரிது பெரியம்மாவும், சிவப்பு ஆடை அணிந்த சிறுமிகளும், மணப்பெண்ணும் மைத்ரியும் இன்னும் பலருமாக.

  

உணவை, கட்டிடங்களை, மனிதர்களை, நிலப்பரப்பை, வசந்த காலத்தை, காதலை, உறவுகளை, பிரிவை, வலியை என்று  ஹரன் வாழ்வை முழுக்க அறிந்துகொள்ளும் அந்த அழகிய அரிய பயணத்தில் அஜிதன் எங்களையும் கைப்பிடித்தும் கச்சரில் ஏற்றியும், பேருந்திலும், ஜீப்பிலும் கூட்டி செல்கிறான்


பைன் மரங்களின் ஊசியிலை சருகுகளும், கோன்களும் நிறைந்த அந்த பாதை வழியே சோனியாவின் கடிவாளக் கயிற்றை பிடித்துகொண்டு ஹரனையும் அவன் மொத்த வாழ்வையும் அத்தனை அழகாக அவள் எடுத்துச் செல்கிறாள்.  மறக்க முடியாத பயணம் எனக்கும்


அன்னையை நினைத்துக் கொள்கையில் ’’தூய அன்பென்னும் திரைக்கு அப்பால் தன்னை மறைத்து வைத்திருந்தார்’’ என்னும் வரிகள்  கண்ணீர் விடச் செய்தன

 

குழந்தை போன்ற உடல் கொண்ட தெய்வ வடிவங்களை,  காதில் கேட்கும் இசையை, புதிய உணவை,கண்கூசும் பின்னொளியில்  நிழலுருவாக  தெரியும் கோவிலை சொல்லுகையிலும். இளமைக்காலத்தை சொல்லிக்கொண்டிருக்கும் மைத்ரியை   மேய்ச்சல் நிலமகள் என்கையிலும் அஜிதன் என்னும் திரைவிலகி  நீங்கள் தெரிந்தீர்கள்


மைத்ரி முழுவதுமே எனக்கு தனித்த பிரியத்தை உண்டாக்கி இருக்கும் படைப்புதான் எனினும் ஹரன் நினைப்பதுபோல் ’’ஒளியாலான, மனதில் என்றும் தங்கிவிடும் தருணமாக’’ எனக்கிருப்பது இருவரும் திரும்பும் வழியில் அந்த உன்னத  பின்மதியவேளையில் பொன்மழையின் ஆயிரம் ஊசிகள் புல்வெளியில் பெய்திறங்குவதை பார்த்தபடி குளிரில் இனிப்பை கொறித்துக்கொண்டு  நெருங்கி அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும்  அந்த சித்திரம்தான்  கூடவே .ஃபெர்ன்களின் அந்த சுருண்ட இளம் குருத்திலை உணவும், அந்த புக்யால் புல்வெளியும்.


மைத்ரிக்கு ஹரன் கஸ்தூரி மிருகு, மாயப்பொன்மான். அவனுக்கு அவள் வனதேவதை   ஜீதுவைப்போல  அந்த 3 நாட்கள் ஹரனுக்கும் பலநூறு வருட வாழ்வு. அந்த நினைவுகளுடன் அந்த பெரு வலியுடன் ஹரன் வாழ்ந்துவிடுவான் அவனுக்கான மீதமிருக்கும் வாழ்வை என்றும், மைத்ரி மற்றுமொரு ரிது என்றும் எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்.

 

கோட் பைக்குள் ஹரனறியாமல் மைத்ரி வைத்திருந்த  வாடியிருந்தும் நிறம் இழக்காமலிருந்த  புல்வெளியின் பலவண்ண மலர்கள் மைத்ரி அவனுக்கு மீட்டுக்கொடுத்த கெளரி.


இந்த வாசிப்பனுபவம் எனக்கும் ஒரு பெருங்கனவுதான்.எழில் நிறைந்த கனவு,என்றென்றும் மனதில் எஞ்சி நிற்கும் கனவு.


அன்பும் ஆசிகளும் அஜிதனுக்கு

அன்புடன்

லோகமாதேவி



மைத்ரி - என் அனுபவம்

ராம பிரசாத்


கேதார்நாத் பயணப்படும் ஹரன் வழியில் ஒரு இளம்பெண் அறிமுகம் ஆகிறாள். அது காதலாக துளிர் விடுகிறது. இந்த மாதிரி கதைகள் நூறு படமாகாப்பட்டு விட்டது. காதல் என்ற வார்த்தையே பழைய ரசம் போல புளித்து விட்டது. இந்த சுழலில் இந்த புத்தகத்தில் எது மிகுந்த சுவாரசியத்தை அளிக்கிறது என்றால் அது காட்சி வர்ணனை தான். மந்தாகினி நதி மலையில் இருந்து இறங்கி கல்லில் அறையும் சத்தம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அனைத்து உரையாடல்களிலும் அது சாட்சியாக இருக்கிறது. இது ஒரு பயணத்தை, நாம் அறியா நிலத்தை, புது மனிதர்களை, அந்த நிலத்திற்கு வந்திறங்கும் ஒரு புதியவனின் பதட்டக் கண்களில் விவரிக்கிறது. ஒரு திட்டவட்ட முடிவுகளில் கதை நகரவில்லை, ஒரு புது இடத்தில் இறங்கும் ஒருவனின் குழப்பங்கள், அறுபடாத சரடாக மந்தாகினியோடு சேர்ந்து ஓடுகிறது. அவனின் கடந்த காலம் பொங்கி அவனை அழுத்தவும் செய்கிறது. "அடுத்து, அடுத்து என்று அழைக்கும் வாழ்வில்,தீடிரென்று பிளந்து கொண்டு வந்து நிற்கும் கணம்" என்ற வரி என்னை கொஞ்சம் இம்சித்தது.அன்றாடம் என்பது பல தொடர் செய்ல்களால் ஆனது. அது பெரும்பாலும் சோர்வைக் கொடுக்கும். ஒவ்வொரு நாளிலும் எதாவது ஒரு கணமே நம்மை அறைந்தது போல மறந்துவிட்டோம் என்று நம்புகிற நினைவுகளை நினைவு படுத்திச் செல்லும். அவை பிளந்து கொண்டு வந்த தருணங்களின் சேமிப்பு தான் நம் வாழ்க்கை.

நாவல் காட்சி அமைப்புகளை விவரிக்க வேண்டுமா இல்லை வெறும் உள நிலைகளுடன் மனிதர்களை நடமாட விட்டு கதைத்திருப்பங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமாபெரும்பாலான எழுத்தாளர்கள் இரண்டாவது வகையே சிறந்தது என்றும் அதுவே வாசகனுக்கு இடமளித்து அவனின் கற்பனைக்கு சாத்திய கூறு அளிக்கிறது என்று வாதிடுவார்கள். அதில் எனக்கு ஓரளவு உடன்பாடு இருந்தாலும் அதை செய்யக்கூடிய எழுத்தாளர்கள் வெகு சிலரே. அசோகிமித்ரனின் ஒற்றன் ஒரு உதாரணம். அவரின் இரண்டு மாத பயணம், அங்கு இருந்த மனிதர்கள், அவர்களுக்கு நேர்ந்த அனுபவம் என்று கதை வேகமாக விரிந்தாலும், நாமும் சில நாள் அமெரிக்காவில் வாழ்ந்த அனுபவம் கிடைக்கும்.இந்த நாவலில் ஹரன், மைத்திரி இருவரும் கச்சர்களின் மேல் ஏறி ஒரு மலை கோவிலில் நடக்கும் திருமணத்தை பார்த்து விட்டு, தேவதாரு காட்டைக் கடந்து ஒரு எரிக்கரையை அடைகிறார்கள். ஆனால் இந்த மொத்தப்  பயணமும் மிக துல்லியமாக விவரிக்கப் படுகிறது. கச்சர்களின் விவரணை , திருமணதில் வரும் நபர்கள், அவர்கள் அணியும் நகைகள், இசைக்கருவி அதன் பின்னணி, அதை வாசிக்கும் முறை, உணவு அதன் செய் முறை, அங்கு விளையும் பயிர், அதை அறுக்க பயன்படுத்தும் கருவியில் மாட்டியிருக்கும் மணி, அந்த நிலத்தின் குளிர்ச்சி,இதற்கிடையில் அவர்கள் பரிமாறிக் கொள்ளும் உணர்வுகள், இப்படி ஒரு மொத்த வாழ்வை, ஒரு கூறாக அறுத்து அதன் ஒரு பகுதியாக கதையின் மனிதர்கள் வருகிறார்கள். ஒரு சிறந்த எழுத்தாளன் நில வர்ணனைகளை முக்கியமாக பதிவு செய்வான், அதையும் விட சிறந்த எழுத்தாளான் மிருகங்களையும் சேர்த்துப்பதிவு செய்வான் . கதை மனிதர்களை பற்றியது தானே, அதை மட்டும் சொல்லிக்கொண்டே போவது என்றால் அது மிகவும் தட்டையான ஒரு கதை மட்டுமே, ஒரு எழுதப்பட்ட புரளி.சில சமயங்களில் அவை சுவரசியமாக இருக்கவும் கூடும். ஆனால் அந்தக் கதைகளுக்கு எந்த அழகியலும் இல்லை

இந்தக் கதையில் வரும் ஹரனுக்கு ஒரு காதல் தோல்வி, இப்பொழுது இந்த நிலத்தில்  ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கிறது,அதனால் ஒரு சிறு பதட்டத்தில் இருக்கிறான். என்னளவில் நான் அந்த நிலத்தில் விடுதியில் அவனருகே படுத்து இருக்கிறேன். மந்தாகினியின் சத்தம் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது,ஹரன் திடீரென்று தூக்கம் முழித்து அதிர்ந்து எழும் போது நான் ஒருக்கணம் அவனை பார்த்து விட்டு மறுபுறம் திரும்பி அந்தக் குளிரில் நன்கு உறங்கினேன்.மறுநாள் அவர்களிருவரின் பின்னால் நானும் ஒரு கச்சரில், மைத்திரி விவரிப்பதை கேட்டுக் கொண்டேச் செல்கிறேன், அசைந்து போகும் உடல் வலி எனக்கும் வருகிறது, அவர்கள் கை கோர்த்து வரும் பொழுது அவர்களுக்காக கழுதையின் மேல் அமர்ந்து மசக் பின்னின் ராகம் மனதில் சூழல்வதை அசை போட்டுக் கொண்டே குளிரில் காத்து இருக்கிறேன். இது அவர்கள் கதை, அதை அவர்கள் விதி தீர்மானிக்கட்டும், நான் இப்பொழுது அந்த விளக்கு போலமைந்த எரியில் அவர்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் பாறையில் அமர்ந்து இருக்கிறேன. இரண்டு நாட்களாக அடுத்த அத்தியாயம் படிக்காமல் அவர்களிருவரையும் நகர விடாமல் அந்த மலை ரகசியமாகப் பாதுகாத்த ஏரியில் அமர்ந்திருகிறேன். இது போலக் கதைக்களத்தில் உறையச் செய்த நாவல்கள் சில மட்டுமே, அந்த வரிசையில் இந்த இடம்  ஒரு உச்ச அனுபவம்.

பயணங்கள் அனைத்தும் ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப வேண்டும். ஹரனின் பயணம் இதற்கு  விதிவிலக்கல்ல. பயணம் முடியும் தருவாயில் அதன் அனுபவங்கள் நம்மை சூழ வேண்டும். பயணக்களைப்பு உடலை வருத்த வேண்டும். மூன்று நாள் பயணத்தில் நிகழும் சந்திப்புகள்,அது தரும் உச்ச அனுபவம் வாழ் நாள் முழுவதும் அவனுடன்  இருக்கும். ஹரன் சென்ற சில வருடங்கள் கழித்து மைத்திரி திருமணம் செய்வாள், பெற்றெடுப்பாள், அன்னையாகி முதிர்வாள். ஆனால் எல்லாவற்றிற்கும் கொடுப்பதற்கு காதல் பிரவகிக்கும் கங்கை அவள். இந்த பித்த நிலைக்கு யதார்த்ததில் ஒரு அர்த்தமும் இல்லை, மாறாக கொச்சையர்த்தமும் உண்டு.இப்படி ஒருத்தியை சந்திக்க நேரும் சராசரி மனிதன் அவளை எப்படி எதிர் கொள்ளுவான்? தன் இல்லத்திற்கு அழைக்கிறாள், அவனோடு தனியே பயணம் செய்கிறாள், எதை நம்பி அவள் இதை செய்யத் துணிகிறாள்? எதன் பொருட்டு வெறும் சில நாள் தங்கும் யாத்திரீகனை கண்டு காதல் கொள்கிறாள்? பித்த நிலையில் மட்டுமே இப்படி ஒரு தைரியமும் நம்பிக்கையும் பிறக்கும். அவள் அந்த மந்தாகினியின் மழழையாக காண்போரை மாயத்தில் ஆழ்த்துகிறாள்.அவள் என்றும் உருகி ஓடிக் கொண்டிருப்பவள். அவளை அணுகி பார்க்க மட்டுமே முடியும். யாருக்கும் சொந்தமல்ல அவள். சந்தனுவின் மனைவியான கங்கை போன்றவள். சந்தனு வெறும் மனிதன் காதல் கொண்டு, வாழ்ந்து மடிபவன். கங்கை என்றுமிருப்பவள். இந்த மைத்திரி வடிவம் ஜெயகாந்தனின், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகத்தில் வரும் பைத்தியக்காரியின் சித்தரிப்பு போல இருக்கிறது. அவளே மலையின் மகளாக பிறந்து மைத்திரியானது போல உணருகிறேன். ஹென்றிக்கு அந்த பைத்தியத்தின் மீது வரும் காதல் இலக்கியம் காணும் மானுட சாத்தியத்தின்   உச்சம். அந்த அளவுக்கு காதல் வரும்பட்சத்தில் மானுடம் அதன் உச்ச நிலையை அடைகிறது. ஹென்றி சந்தித்த ஒரு பிச்சியை மற்றொரு யுகத்தில் இன்னொரு இளைஞன் சந்திக்க நேரிடுகிறது. இலக்கியம் இந்த முறையும் மானுடத்தின் எல்லைகளின் சாத்தியத்தை மீண்டும் கணவு காண்கிறது. அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை ஒரு பாறையை துளைத்து மலரும் சிறு பூவென நம்மில் மலரச் செய்கிறது இந்த நாவல்.

நன்றி

ராம்.


மைத்ரி வாசிப்பு- பாரி


மைத்ரியை நான் வாசித்தபோது பெரும்பாலும் அதை ஒரு லட்சிய கனவுவெளியாகவே வாசித்தேன். ஹரனின் மூன்றுநாள் பயணமாக நாவல் விரிகிறது.

லட்சிய நிலத்தில் எவ்வித திட்டமிடலும் இல்லாத வகையில் அமைந்த ஒரு பயணம், பயணத்தில் சந்திக்க நேரும் அந்நிலத்தின் வடிவான களங்கமில்லாத பெண், அங்கு பகற்கனவுகளில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய வகையில் அவர்களுக்குள் ஏற்படும் லட்சிய உறவு. மூன்று நாட்களில் முழுமையடைந்து விட்ட முழுவாழ்வு. மனித வாழ்வில் நாம் இதுவரை கண்டடைந்த முதன்மையான இனிமைகள் அனைத்தும் அந்த மூன்று நாட்களுக்குள் அவனுக்கு அனுபவமாகின்றன. பசுமை போர்த்திய பெருமலைகள், அதை சுற்றிய அரைஞான் சாலையில் நிகழும் திகில் பயணம், ஆசுவாசப்படுத்தும் தோழியாய் உடன்வரும் மந்தாகினி, புன்னகையை நிரந்தர முகபாவமாக கொண்ட மனிதர்கள், பெண்மையின் கண்ணிமையின் அணுக்கம், தாலாட்டும் பழங்குடி இசை, பள்ளத்தாக்கை நோக்கி விரிந்த புல்வெளி, தீராப்பசி கொண்ட பெட்டை நாய், விதவிதமான மனிதர்கள் (டிஜே பாட்டு போட்டுக்கொண்டே ஒற்றைக் கையில் ஜீப் ஓட்டும் இளைஞன், கதையளக்கும் மிலிட்டரிக்காரர்), ஆற்றோரம் அமைந்த விடுதியில் கிடைக்கும் தனிமையான மாடி அறை, கடும் பயணத்தில் மட்டுமே ஏற்படும் பசியும் களைப்பும் அதற்க்கேற்ற உணவும் உறக்கமும், குதிரையின் பலமும் அதைவிட புத்திக்கூர்மையும் கீழ்படிதலும் கொண்ட கச்சர்கள், மலைக்கோயிலில் நிகழும் திருமண விழா, வண்ணங்கள், ஆபரணங்கள், வாத்தியங்கள், சிகப்பு முத்தாக ஜொலிக்கும் மணப்பெண், செவ்வியல் செதுக்கல்கள் ஏதுமற்ற அம்மையப்பனின் தரிசனம், அறுபடாத மசக்பின் இசை, மூவுலகையும் இணைக்கும் வானுயர் தேவதாருக்கள், சீதை மயங்கிய மாயமான், மலைவெளி எங்கும் விரிந்த வண்ண மலர்வெளிகள், அதை கொய்ய வரும் தேவதைகள், நாகரிகம் தீண்டா மலைக்கிராமங்கள், அங்கு குழந்தைகள் தலைமையேற்று நடைபெறும் ஒரு திருவிழா, குழந்தை சப்பரங்கள், வீட்டு முற்றத்தில் குழந்தைகள் விட்டுச்செல்லும் மலர்க்குவைகள், நிலத்தின் சுவையாய் அமைந்த முழுமையான விருந்து, உணவின் சூழலின் மயக்கத்துடன் கூடிய பின்மதிய உறக்கம், இளமழையின் பொன் தூறல், இவையாவாகவும் விரிந்து மேலும் நுட்பங்களை காட்டி தன்னை முழுதளிக்கும் காதலி, அவளுடன் ஏற்படும் மாயா.

துலாவின் மறுபக்கமாக அவனும் சிற்சில தருணங்களில் மைத்ரியும் கொள்ளும் அகத்தனிமை மட்டுமே நாம் கீழிறங்கி மண்ணில் கால் பதிக்கும் இடங்கள். அந்த அகத்தனிமையில் இந்த இனிமைகள், உறவுகள் யாவும் என்னவாக பொருள் கொள்கின்றன என்பதே என்னுள் நாவல் எழுப்பிக் கொள்ளும் முதன்மையான கேள்வியாக நினைக்கிறேன். பெரும்பாலும் இவையாவும் பொருளற்றவை என்பதே நவீனத்துவ பதில். ஆனால் ஹரன் அடைந்ததோ அல்லது மைத்ரி அளித்ததோ அவ்வாறான எளிய 'பொருளற்ற' உலகியல் இனிமைகள் அல்ல. அந்த இனிமையான பயணத்தின் வழி அவர்கள் தொட்டுத் தொட்டு செல்வது இங்கிருக்கும் எல்லாவற்றிலும் அமைந்த சாரமான ஒன்றை. அது தொலைதூர மலைகளின் தவத்தில் காணக்கிடைப்பது, அல்லது எப்போதும் கைக்கெட்டும் தொலைவில் இங்கிருப்பது. பொன்னொளிர் தரிசனமாக நம்மை கரைத்தழிப்பது. பின்னர், கடும்குளிரிலும் களைப்பிலும் வெந்நீர் ஊற்றாக நம்மை ஆற்றுப்படுத்துவது. விரும்பினால் லட்சம்கோடி விண்மீன்களாக மாறி நம்மை சூழ்ந்து கொள்வது. ஆம் இயற்கையை இந்த அலகிலா விளையாட்டை நிரைந்து ததும்பும் ஆற்றலை அறிந்தவனுக்கு தனிமையில்லை, மைத்ரி என்றும் உடனிருக்கிறாள்.


அன்புடன்,

பாரி.

மைத்ரி - ரஞ்சனி அரசி


அஜிதன்(னின்) மைத்ரி இரண்டு நாட்களில் படித்த முதல் தமிழ் நாவல். உண்மையில் இது எனக்கு மட்டுமல்ல, பாரி உட்பட என்னைப் புரிந்து கொண்ட எவருக்கும் ஒரு பெரிய அதிசயம். "மைத்ரி" என்று பாரி கூறும் போதே அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் ஈர்ப்பு வந்தது (love at first heard).

முதலில் நான் படித்து சரியான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டேன். தெரியாத தமிழ் வார்த்தைகளின் அர்த்தத்தை ஆங்கிலத்தில் கேட்டேன், பின்னர் மைத்ரியுடன் மந்தாகினி போல்  நிறுத்த முடியாத ஓட்டம் என் கால்களை அவிழ்த்துவிட்டு ஹரன் மற்றும் மைத்ரியுடன் பயணித்தேன். பல விஷயங்களுக்கிடையில் மனோபாவங்கள், தோற்றங்கள், மொழிகள், எதிர்வினைகள், பிஜிஎம், உடைகள் மற்றும் அவற்றின் ஆடைகள், ஆபரணங்கள் குறிப்பாக தொப்பி, திருவிழாக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப விழாக்கள், உணவுகள், விருந்து, உறக்கம், வீடுகள் அதனின் முற்றம், இசைக்கருவிகள், பாட்டுகள், பறவைகளின் அணுகுமுறைகள், இராணுவ அதிகாரியின் வரலாற்று புனைகதைகள்(fable story) ,புராணக்கதை, தேவதாரு மூவுலகம், மழையின் மாயா, தனிமையில் மாடி, பின்புறம் இருந்த மந்தாகினி,ஒற்றை பெரும் கற்பாறை, இரண்டு பெண்கள், வண்ணமயமான மலர்களால் மலைகளை மூடியது, நீரின் நிலை, தன்மை, அழகு - ஒலி, ஒளி (spreading love to all) இதன் மறு உருவில்  அமைந்தாள் மைத்ரி.  ஹரன் செய்தது தவறு என்று புரிந்துக்கொண்ட தருணம். 

மைத்ரி யின் குழந்தை தன மான சிரிப்புடன் கொஞ்சும் மொழியில் என்னை நானே பார்த்தேன். பல இடங்கள்  இனிமையான தருணங்களை நினைவூட்டியது. I thoroughly lived through the novel by five sensations. 

 இயற்கை யுடன் வாழ்ந்த இயற்கையான அவளை இயற்கையை ரசிக்க வந்த ஹரன், அவன் மனநிலையை மாற்றிய இயற்கை அவள். மூன்று நாட்கள் பயணம் (One heart(novel) , two souls, merged in three days),. மைத்ரி இரண்டு நாட்களில் படித்து மூன்றாம் நாள் நினைத்துக் கொண்டு அடுத்தடுத்த வேலைகளை என்னவென்று செல்கிறேன் ஹரன் போல.


மாய மைத்ரிக்கு நன்றி. 



அதிகாலையின் வெள்ளிமீன் - பிரபு மயிலாடுதுரை


”சமகாலத் தமிழ் நாவல் பரப்பில் அதிகாலையின் வெள்ளிமீன் எனத் தயக்கமின்றி சொல்லக் கூடிய நாவல் அஜிதனின் ‘’மைத்ரி’’. அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தரிசனத்திலும் முற்றிலும் ஒரு குறுங்காவியம் எனச் சொல்லத்தக்க நாவல். இந்த நாவலை வாசித்த போது ஒவ்வொரு விதத்தில் எனக்கு இந்தியாவின் பெரும் நாவலாசிரியர்களான தாரா சங்கரும், விபூதி பூஷணும் கிரிராஜ் கிஷோரும் நினைவில் எழுந்து கொண்டே இருந்தார்கள். நாவலை வாசித்து முடித்ததும் அது ஏன் என்பதை புறவயமாக வகுத்துக் கொள்ள முயன்றேன். மூவருமே இலக்கிய ஆசான்கள். மூவருமே தங்கள் செவ்வியல் படைப்புகள் மூலம் இலக்கியத்தில் நிலை பெற்றவர்கள். மைத்ரியின் ஆசிரியர் தனது முதல் நாவலை எழுதியிருக்கிறார். அவ்வாறெனில் அவர்களின் பொது அம்சம் என்ன? வேறுவிதமாக யோசித்துப் பார்க்கலாம். ஆசான்கள் மூவரும் சமவெளியை எழுதியவர்கள். அஜிதன் மலை உருகி நதியாகும் தோற்றுமுகத்தை எழுதியவர். தோற்றுமுகத்துக்கும் சமவெளிக்கும் தொடர்பாயிருப்பது நதி. அஜிதனுக்கும் ஆசான்களுக்கும் பொதுவாயிருப்பது கூட அந்த நதியின் பிரவாகம் தான் என எண்ணிக் கொண்டேன்.”


கடிதம் - அன்பரசி


அன்புள்ள எழுத்தாளர் அஜிதன் அவர்களுக்கு,

மைத்ரி நாவல் ஆறு நாட்களுக்கு பின் இன்று வாசித்து முடித்தேன்முதல் நாவலுக்கு என் வாழ்த்துக்கள்.

உண்மையில் ஹரன் கண்ட மலைக்காட்சி அனுபவங்கள் இதுவரை நான் பயணித்து அறிந்த சிறுசிறு மலைக்காட்சி அனுபவங்கள் அனைத்தையும் ஒரு சேர திரட்டி பல மடங்கு பெருக்கி மகிழ்ச்சியை தந்ததுபூஞ்சோலை,நீண்ட மரங்கள்,பறவைகள்கால்நடை மந்தைகள்மழைமேகம்,பனிமலை உச்சி என ஒவ்வொன்றும் ஒரு இயற்கை விழா.

நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரையும் (சிக்கிசோனியா உட்படமுக ஜாடை முதல் அவர்களின் னவோட்டங்கள் வரை துல்லியமாக புரிந்து கொள்ள முடிந்ததால் நிகழ்ச்சிகளை காட்சிபடுத்தியதில் இந் நாவல் ஒரு உச்சம்.

நாவல் முழுக்க இயற்கை உவமைகள் னைத்தும் மிகவும் கச்சிதமாகவும் அதிகம் பயன்படுத்தாத புதியதாகவும் இருந்ததுமலை உச்சியில் இருந்து கடந்து வந்த பாதையை  "கயிற்றேணிஎன குறிப்பிட்டிருப்பதுஇது போல பல நூறு நுண்ணிய உவமைகள்

அந்த அதிகாலை தனிமையில்ஹரன் ண்ணாடி வழியே கருஞ்சிவப்பு சூரி பறவையை தொட்டு கொண்ட ஒரு சிறி கணம் உணர்வு மிக்க தருணம்.

விருந்தோம்பல் நிகழ்வின் மூலம் ரிது பெரியம்மாவுக்கும் மைத்ரிக்கும் உள்ள அழகான உறவு வெளிப்பட்டது.

மைத்ரி ஒரு  மலைபெண் மட்டுமல்ல. சிறந்த கதை சொல்லியும் கூட.

கதையில் குறுகிய நேரத்தில் வந்தாலும் ஹூக்கோ தாத்தா உடனான உரையாடல் நன்றுதென்னிந்தியா என ரன் கூறும் போது அவர் "டெல்லிஎன்பதும்அவர் அவ்வளவு தெற்கு தான் வர முடியும் என்பதும் புன்னகையை வரவழைத்தன.

தொடர் உடல்பயணத்திற்கு பின் ஏற்படும் பெருங்களைப்பை வெளிப்படுத்திய பத்திகளும் சிறப்பாக இருந்தது.

வாழ்த்துக்கள்தொடர்ந்து எழுதுங்கள்

அன்புடன்,

அன்பரசி  


வாசிப்பனுபவம்: விவேக் ராலெஹ்

 

காஷ்மீரிய சைவத்தில், அபினவ் குப்தாவால் தொகுப்பட்ட தத்துவ களஞ்சியம்  கௌலா, க்ராமா, ஸ்பந்தா, பிரத்யபிக்ஞா என்று நான்கு மரபுகள் உள்ளன. இதில் உள்ள ஸ்பந்த தத்துவத்தில் சிவன்-சக்தியின் உரையாடலே, இப்பிரபஞ்சத்தில் எல்லாமே மாறக்கூடியவை, மாறாதவை தூய உணர்வு (Pure Consciousness), இயக்கமில்லா இயக்கத்தை, அதிர்வில்லா அதிர்வை எப்படி உணர்வது.  இதற்கு பல வழிகள் உள்ளன, காதல் காமம், கவிதை, இசை மூலம் அந்த அதிர்வை நாம் உணர்வது  ஸ்பந்தா,  பிரத்ய விக்ஞா என்பது நம்மை உணர்தல், மறு கண்டெடுத்தல் . நாவல் முழுவதும் வரும் இக்கதைகளம் ஸ்பந்த தத்துவத்தில் வரும் சிவன் சக்தியின் இடையேயான உரையாடலும், காதலும், முரண்களும், அதன் முடிவில் சுயகண்டெடுப்பான பிரத்ய விக்ஞா பாதையில் முடிகிறது . நாடகத் தருணங்கள், பாசாங்குகள் இல்லாத, மனுடத்தால்   வரையறுக்கப்  படாத உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவே  கதைக்களம் அமைக்கப்படுகிறது. அறிமுகம் இல்லாத உறவுகள் முதல் சந்திப்பிலேயே சில சமரச புள்ளிகளை அவர்கள் எட்டுவது ஏன்  என்று சமயங்களில் தோன்றும், ஆனால் மனித உணர்வுகளின் ஊசலாட்டத்தை விளக்குவது எளிதா என்ன , துயரத்தை  துரத்தி செல்வதற்கு  மானுடத்துக்கு ஏதாவது காரணிகள் வேண்டும் , பொருளாதாரம், உறவுச்  சிக்கல்கள். இதுவே   மனிதத்தை  உயிர்ப்போடு வைத்திருக்கிறது, ஞானத்தை, விடுதலையை நோக்கி விடையாக நாம் நகர்கிறோம்.  ஹரன் சிறு வயதில் தனது தாயின் மரணம், காதலின் துயரத்திற்கு பிறகு, கலங்கிய வாழ்க்கை  சூழலில் மைத்ரியை பார்க்கிறான், மைத்ரியை சந்தித்தவுடன்  தற்காலிமாக நிறைவை அவன் உணர்ந்தாலும், ஆழ்மனதின் துன்பத்தை எளிதில்  மைத்திரி கண்டுகொள்கிறாள் . ஹரன் இழப்புகளை தாண்டி செல்வது, ஒரு லட்சியம் இல்லாத பயணத்தை நோக்கி,  மனம் சிதறுண்டு  நிலையில்லாத ஆத்மாவாக, தீரா பெருங் காமம் கொண்டவனாக,  மைத்ரியை சந்திக்கும் போது, தேவி அவனை தேர்ந்தேடுகிறாள். ஹரன்  என்னுடன் வா, கதவுகள் மூடப்பட்ட வாழ்க்கையிலிருந்து , கடந்த கால ஏக்கங்களில், தொடர்ச்சியான இன்னல்களில் இருந்து இதோ உன்னை விடிவிக்கிறேன், சிதறிய மனதை ஆற்றுப்படுத்துகிறேன்.  அவளின் குறும்புத் தோரணம், முகத்தில் இயல்பாக, முத்தத்தை எதிர்நோக்கும் குழந்தை போல் அமர்ந்திருந்ததும், அலைபாயும் கண்களை பார்த்தவுடன் ஹரன் தேவியின் தரிசனத்தை, பாதை அறியாத மலை பிரதேசத்தில்  ஒருவிதமான கனவுத்தன்மைக்கு செல்கிறான். மைத்திரி, முலையூட்டம் பேரன்னையாக காட்சி படுத்துகிறாள், சுயகண்டெடுப்பை அறிய அருளுகிறாள், அவனின் மைய விசையே அவளாக உருமாறுகிறாள். தனியர்களான மனிதர்கள் அறிமுகம் இல்லாதவர்களை ஒரு விலக்கத்தோடு பார்க்கிறார்கள், ஓரிரு சம்பிரதாய வார்த்தைக்கு மேல் பேசுவதும் இல்லை,  அச்சத்தின் பொருட்டு தொடர் உரையாடல்கள்  அமைவதில்லை. ஆனால் மைத்திரி சராசரித்தனத்தில் இருந்து தன்னை விலகி தூய ஆத்மாவாக ஹரனின் கைகளை பற்றுகிறாள், கட்வாலி பாடல்களை அறிமுகப்படுத்துகிறாள். தேவி அவனை கலையால் தன்னுள் முழவுவதுமாக கொண்டுவிட்டால், இனி ஹரன்  அமுதூட்டும் அன்னையின் மடியிலே.  ஹரன்  ' நான் இல்லாமல் ஒரு கணமும் அவள் முழுமை கொள்ளக் கூடாது, நிறைவடையக் கூடாது. அப்படி நிறைவடைவதை என் தோல்வியாக மட்டுமே என்னால் காண இயலும்.'  அவள் உள்ளூர சிரிக்கிறாள், நான் உன்னை பெற்றெடுத்த பேரன்னை, இதோ நான் உன்னை தேர்வுசெய்திருக்கிறேன். அவளை தேவியாக கற்பனை செய்துகொண்டு , அவள் பாதங்களின் அடிப்பகுதியில் அமர்ந்து , என்னை மணப்பாயா தேவி என்கிறான். சௌந்தரிய லஹரியை உவமை கூறி ஆதி சங்கரன் என்ற அத்வைதி  இவளின் மூதாதையை பார்த்திருப்பானோ என்று எண்ணுகிறான். ஷோப்பனோவரின்  எதிர்மறை/மறுப்புவாத கொள்கையில் இப்பிரபஞ்ச  இருத்தலை இப்படி சித்தரிக்கிறார்.

 

1. இருத்தல்  என்பது மானுடத்  தவறு

2. இங்கிருக்கும் இருப்பில் அர்த்தம் இல்லை

3. மனிதர்களுக்கு மகிழ்ச்சி என்பது இங்கு இருக்கும் வரை இயலாது  .

4. வாழ்க்கை என்பது துன்பமும்/தீயவையும் தான். 

 

முற்றிலும் எதிர்மறை தன்மை கொண்ட தத்துவவாதி  The World as Will and Representation என்ற புத்தகத்தில்  "The Metaphysics of Sexual Love" என்ற கட்டுரையில், காதல் என்பது நம் பகுத்தறிவுக்கு எதிரானது, நம் சந்ததிகளை பெருக்கி, நம் இருப்பை உறுதிப்படுத்துவத்துக்கான  உயிரியலின் உத்தி, அதற்காகவே மானுடர்கள் காதலிக்கிறார்கள் என்கிறார்.  'தூய அறிதலே', ப்ரம்மச்சாரியமே  மானுடத்தின் விடுதலை என்றும்  கீழத்திய பௌத்த தத்துவதில் இணைகிறார்., அதில் மட்டுமே மனிதன் இன்பத்தை காண முடியும், இன்பத்தின்  மறுபக்கமாக  உடனே துன்பத்தில் மனிதன் மீண்டும் சிக்குண்டு தவிப்பான் என்பது அவரின் புகழ்பெற்ற will-life கோட்பாடு. மைத்திரியின் தொடக்கத்தில் ஹரன் கலங்கிய மனதோடு இமயமலையில் பயணத்தை தொடங்குகிறான், தேவியின் தரிசனத்திற்கு பின்பு 'அறிதலை', தொடர் பயணங்கள் மூலம் தொடுகிறான், சுயகண்டெடுப்பு நிலைக்கு சென்றவுடன், அவளின் விடுதலுக்கு பிறகு மீண்டும் துன்புறுகிறான். இங்கே தத்துவத்தின் உயரிய விழுமியங்கள்   நாவலில் எங்கும்  வருவதில்லை, எளிதான உரையடல்கள், அரவணைப்புகள், இமயமலையின் நிலவியல்களை, அதன் தொன்மங்கள் மற்றும் முரண்கள் மூலம், இமயமலையின் பிரம்மாண்டத்தின்  அருகில் சிறுகுழந்தையாக வழிநடத்துகிறாள். அவள் இமையத்தின் இயற்கையை, பழங்குடி மரபுகளை, இசை நுணுக்கங்களை எல்லாம் கற்றுக்  கொடுக்கிறாள்.   மந்தாகினி, சோன்ப்ரயாக், நாகேந்தர் தாதா குதிரை லாயம், கௌரிகுந்த்,  த்ரிஜூகிநாராயன் கோவில், டாமோ, மசக்பின், சுன்கியாலி, சௌலாய் மார்ச்சு, தேவதாரு மரங்கள், கஸ்தூரி மிருக், பன்வாலி காந்தா புக்யால் புல்வெளி, ப்ஹரல் ஆடுகள், நர்சிங் காவுன், போட்டியா இனமக்கள், நாய்கள், நந்தா தேவி கோயில்,  குலதேவா கோயில், கங்கீ, ஜாகர், குலதேவதா கதைகள், பகட்வால் என்ற வீரரின் புராண கதைகள், மோனல் பறவைகள்,  கங்கையின் பிறப்பிடம் கங்கோத்ரி பர்வத்.  பலநூறு பண்பாடுகளையும், நிலப்பரப்பையும் அறிமுகப்படுத்துகிறாள். காலத்தை திரும்பி பார்த்தால் ஹரனுக்கு இப்பயணம் ஆன்மதரிசனமாக இருக்கும். வீட்டை விட்டு 'கிளம்பிச்செல்' என்று தனக்குள் ஏதோ ஒரு குரல் அவனை அழுத்தும்.நாம் பார்க்கும் இந்த இமய மலை  நமக்கு காளிதாசனால் அறிமுகப் படுத்த பட்டது என்று நடராஜ குரு சொன்னது, சில வருடங்களுக்கு முன்பு பூன் மலைத்தொடரில் உள்ள லிட்டில் சுவிட்சர்லாந்து என்ற மலைக் கிராமத்திற்கு நண்பர்களுடன்  சென்றிருந்தேன். அங்கே  உணவு விடுதியில் ஒரு பெரியவரை சந்தித்தேன், அவர் புத்தகம் படித்துக் கொண்டே காப்பியும் குடித்துக் கொண்டிருந்தார். எதார்த்தமாக பேச்சுக் கொடுத்தேன், ஒரு ஆழ்ந்த உரையாடலாக சென்றது, அவர் வியட்நாம் போரில் பங்குபெற்றிருக்கிறார், அதன் பின் நீண்ட காலமாக மனச்சோர்வில் இருந்து, அமெரிக்காவில் நீண்ட பயணம் செய்து, இந்த மலை கிராமத்திற்கு வந்துள்ளார். இலையுதிர்காலத்தின்  அதிகாலை விடுதி அறையிலிருந்து வெளியே வந்தவுடன்,  மேகங்கள் புகையாக, வண்ணங்களை தெளித்த  மலையில் படிந்த காட்சியை பார்த்தவுடன் சற்றென்று அவரின் சோர்வு களைந்து, இனி இங்கு நான் நேர்மறையாக செயலாற்ற வேண்டும் என்று முடிவெடுக்கிறார். தற்போது இங்கிருக்கும் Wild Life க்கு நிதி திரட்டுவதே ஸ்வதர்மம் என வகுத்துக் கொண்டார். இயற்கையை ரசிப்பதற்கான பயிற்சியை எங்கிருந்து பெற்றீர்கள் என்று கேட்டதுக்கு புனைவுப் புத்தகம்  தான் என்றார். மைத்திரி படிக்கும் போது இச்சம்பவம் ஞாபகம் வந்தது.  இங்கிருக்கும் சலிப்புகளில் இருந்து விடுபட்டு ஒரு பயணம் செல்வதற்கும் சில அடிப்படை பயிற்சிகள் அவசியம்.  தொடர் பயணங்கள்/கற்றல் வழியாக புனைவெழுத்தாளர், வாசிப்பவரின் அகத்தில் இயற்கை வர்ணனைகளை ஆழமாக நிலைபெறச் செய்யமுடியம், மைத்திரியில் இவ்வுலகமும் அதன்  இயங்குவிதியும்  நம் சராசரித்தனத்துக்கு அப்பாற்பட்டவை என்கிறது.  Gestalt theory யில்  சொல்லப்பட்டதுப் போல, இமயமலையின்  காட்சிகளை கற்பனைமூலம் இணைத்து முழுமையான வடிவங்களாகநாவல் உணரச்செய்கிறது. பயணங்களில்  வாழ்வுக்கான அர்த்தத்தை, விவாதித்தும் முரண்பட்டும் தத்துவ விசாரங்களிலிருந்து மைத்திரி கற்றுக்கொடுக்கிறாள். நாவலில்   இறுதியில் வரும் வலிகள், துயரங்கள், ஐரோப்பிய தத்துவவாதிகளும் (நீட்சே), எழுத்தாளர்களும் (ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி), தொடர்ந்து மனிதர்களுக்கு  துயரங்கள்  ஏன் அவசியம் என்கிறார்கள். துயரங்களே  மனிதனை  கருணையோடு இருக்கச் செய்கிறது, ஆன்மிகத்தை  நோக்கி உந்துகிறது, கலையே கூட துயரங்களின் வெளிப்பாடு அல்லவா . மைத்திரி விலகிச் செல்லும் போது ஹரன் துயரங்கள் மூலம் அடையும் விடுதலை உச்சகட்ட நாடகியத் தருணம், அவ்விடத்தில் செவ்விய தன்மையை அடைகிறது .  ஹரன்  சந்தித்த  துயரங்கள் அனைத்தும் இந்த உச்சக்கணத்துக்கு தானே, அங்கிருந்து நாவல் மீண்டும் தொடங்குகிறது.  ஆம் மைத்திரி கொடுப்பதற்கு மட்டுமே பிறந்தவள், அபினவ் குப்தாவிற்கு தீக்ஷசை அளித்த தேவியே மைத்திரி. யா தேவி சர்வ பூதேஷு !!   இலக்கிய படைப்பு நல்ல ஆன்மீகமான அனுபவத்தை நம்மிடம் கொண்டுசேர்த்துவிடும்,  ஞானத் தேடல் கொண்ட படைப்புகளை எழுதும் போது  சொற்பொழிவுத்  தன்மை வராமல் இருப்பது அவசியம், ஆன்மிக  வினாவாக வாசகனே எழுப்பிக் கொள்ளுதல் அவசியம்.. இங்கு சொற்பொழிவுகள் இல்லை, வாசித்து  முடிக்கும் போதே பல ஆன்மிக கேள்விகளை எழுப்ப முடியும், அவ்வகையில் தமிழில் இது புதிய முயற்சி. புகழ்பெற்றய ரஷ்ய இயக்குனர் Andrei  Tarkovsky"இங்கிருக்கும் அனைவரும் நம்முடைய நேரத்தை ஆன்மிகமான மேம்படுத்த வேண்டும் என்கிறார். அதை செய்வதற்கான முக்கிய கருவி கலை என்கிறார்". அஜிதன் அந்த கருவியை தன் வசமாகிக் கொண்டார் என்றே நினைக்கிறேன்.  அவர் இதுவே தன்னுடைய கடைசி  நாவல் முயற்சி என்று முன்னுரையில்  எழுதியுள்ளார். நாவலை வாசித்தவுடன் தோன்றியது, தான் சேர்ந்திருக்கும் எத்துறையிலும் அவரால் சிறப்பாக செயலாற்றமுடியும். அவருக்கு வாழ்த்துக்கள். 

 



 

 

 

Post a Comment

0 Comments